ஜல்லிக்கட்டுக்காக ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
உண்ணாவிரதம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் , ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் கூறியிருப்பது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
அவசரச் சட்டத்தை முன்கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் பொங்கல் அன்றே ஐல்லிக்கட்டு நடைபெற்றிருக்கும். எனினும், இனியும் காலதாமதமின்றி உடனே ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும். மேலும், இனி எந்த வகையிலும் ஜல்லிக்கட்டு தடைபடாத வகையில், காளைகளை மத்திய அரசும் அதன் அறிவிக்கையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாடிவாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்படும் வரை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தியது திமுக, இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவினர் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.