பீட்டாவை தடை செய்ய சட்ட நடவடிக்கை.. சசிகலா அதிரடி!
அதிமுக பொதுச்செயலர் சசிகலா வெளியிட்ட அறிக்கையில், "ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கோரிக்கைவிடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கைவிடுக்க உள்ளார். இதையடுத்து இன்று இரவே அவர் டெல்லி கிளம்ப உள்ளார். முன்னதாக போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலர் சசிகலாவும் அறிக்கை வெளியிட்டார். அதில், "ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம்.
பீட்டாவை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்டரீதியாக மேற்கொள்வோம். ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். பீட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது" என கூறப்பட்டுள்ளது.