குடியரசு தினத்திற்கு போக மாட்டோம்.. போலீஸ் பதில் சொல்லியே ஆகனும்.. கொந்தளிக்கும் மீனவ பெண்கள்
26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு கடற்கரையோரம் வசிக்கும் மீனவ மக்கள் செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
சென்னை: மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் மிக விமர்சையாக ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதியன்று அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். போலீசார் தங்கள் மீது நிகழ்த்திய வன்முறையால் இந்து ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நடுகுப்பத்து பெண்கள் அடித்துக் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி ராணுவ அணிவகுப்பு மற்றும் மாணவி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் விமர்சையாக நடைபெறும். காந்தி சிலையில் இருந்து தொடங்கும் இந்த நிகழ்ச்சியை மெரினா கடற்கரை சாலையில் முழுவதும் பொதுமக்களும், சிறுவர், சிறுமியர் கூடி கண்டு களிப்பார்கள்.மெரினா கடற்கரையில் அருகில் உள்ள மீனவ மக்கள் மற்றும் அதனை சுற்றி வசித்து வருவோர் அதிக அளவில் இதில் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், நேற்று நடுகுப்பத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதி பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். போலீசார் தங்கள் வாழ்வாதாரத்தை எரித்ததோடு, வீடுகளில் நுழைந்து பெண்களை அசிங்கமான வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்துவிட்டு சென்றுள்ளனர்.
போலீசார் அராஜகம்
மெரினாவில் 6 நாட்களாக மாணவர்களின் அமைதிப் போராட்டம் நடைபெற்ற போது இங்கிருந்து மீன் குழம்பு வைத்து, சோறாக்கி கொண்டு போய் கொடுப்போம். அப்போது, போலீசாரும் அவர்களோடு சேர்ந்து நிற்கிறார்களே என்று அவர்களுக்கும் சேர்ந்து சமைத்து கொண்டு போய் கொடுத்தோம். அதற்கு நல்ல பலனை நடுகுப்பத்து மக்களுக்கு போலீசார் கொடுத்துள்ளனர் என்று லட்சுமி கூறினார்.
மிரட்டல்
நடுகுப்பத்தில் இவ்வளவு அநியாயம் செய்துவிட்டுச் சென்ற போலீசார் இன்று காலையில் வீடு வீடாக சென்று, வாகனங்களை கொளுத்தியது "நாங்கள்தான்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு சரண் அடைய வேண்டும் என்றும் மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறினார்கள். அப்படி ஒப்புதல் அளித்தால்தான் பிடித்து வைத்திருப்பவர்களை வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் போலீசார் அச்சுறுத்தியுள்ளதால் பதறிப் போயுள்ளனர் இப்பகுதிவாசிகள்.
தீர்வு
போலீசாரின் இந்த அராஜகத்திற்கு நல்ல பதில் வேண்டும் என்று கூறும் மீனவப் பெண்கள், இன்று பொழப்பிற்கு போனால்தான் நாளை எங்களுக்கு சாப்பாடு. எனவே, எந்த தவறையும் செய்யாத எங்கள் கடைகள், வாகனங்களை எரித்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் உறுதியாகக் கூறினார்கள்.
கறுப்புதினம்
போலீசாரின் இந்த அராஜகமான செயல்பாட்டால் தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் பாழாகியுள்ளதாகக் கூறும் பெண்கள், இந்த ஆண்டு குடியரசு தினம் எங்களுக்கு இல்லை என்று கூறினர். இந்த நாள் தங்களுக்கு ஒரு கருப்பு தினமாகத்தான் இருக்கும் என்றும் கடற்கரை சாலையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளைக் காண எங்கள் வீட்டில் இருந்து ஒரு குழந்தையும் செல்லாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர்.