சென்டிரல் ரயில் நிலையத்தில் சுடசுட ரூ.15க்கு கிடைக்கும் மசால் தோசை.. பயணிகள் மகிழ்ச்சி
சென்னை: சென்டிரல் ரயில் நிலைய உணவகத்தில் 15 ரூபாய்க்கு மசாலா தோசை கிடைக்கிறது. இதேபோல பல உணவுகளும் குறைந்த விலைக்கு கிடைப்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே சார்பில் 'ஜன் ஆஹார்' எனும் உணவகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு 2 இட்லி ரூ.12க்கும், பொங்கல் ரூ.15க்கும், ரவா உப்புமா ரூ.15க்கும், 2 வடை ரூ.16க்கும், 2 உருளைக்கிழங்கு போண்டா ரூ.12க்கும், ரவா கேசரி ரூ.9க்கும், தயிர்சாதம் ரூ.17க்கும், சாம்பார் சாதம் ரூ.19க்கும், புளிசாதம் ரூ.20க்கும், லெமன் சாதம் ரூ.18க்கும், தேங்காய் சாதம் ரூ.16க்கும், தயிர்வடை ரூ.14க்கும், காபி ரூ.10க்கும், டீ ரூ.5க்கும், சப்பாத்தி ரூ.28க்கும், தக்காளி சூப் ரூ.15க்கும், இரு வெஜ் கட்லெட் ரூ.25க்கும், வெஜ் பிரியாணி ரூ.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி முதல் மசாலா தோசை கவுண்ட்டர் திறக்கப்பட்டது. ரூ.15க்கு வழங்கப்படும் மசாலா தோசை பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மசாலா தோசை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே சென்ட்ரலிலுள்ள சில தனியார் முன்னணி உணவகங்கள் கொள்ளை விலையில் உணவு பொருட்களை விற்று வருகின்றன. இந்நிலையில் ஜன் ஆஹார் உணவகம், பயணிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாடு முழுக்க முக்கிய ரயில் நிலையங்களில் இந்த உணவகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.