காலமும் காட்சிகளும் மாறின: 18 ஆண்டுகாலம் இழுத்தடித்துவிட்டு 'அப்பீலுக்கு' பறக்கும் ஜெ.!!
சென்னை: தம் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகாலம் இழுத்தடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாக வேண்டும் என்பதற்காக மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று படுவேகமாக இருப்பது விந்தையாகத்தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல்பார்வையாளர்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பாலி நாரிமன், மேல்முறையீட்டுக்குரிய ஆவணங்கள் அனைத்தையும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டோம். அதனால் விரைவாக விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தரப்பட்ட வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா திடீரென இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 17-ந் தேதி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட போது, டிசம்பர் 18-ந் தேதிக்குள் அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை எனில் ஜாமீன் ரத்தாகிவிடும் என்று எச்சரித்திருந்தது. இருப்பினும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் துரிதகதியில் செயல்பட்டு மேல்முறையீட்டு மனுவுக்குரிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தின் கெடுவுக்கு முன்னதாகவே தாக்கல் செய்துவிட்டனர்.
முன்கூட்டியே விசாரணை
மேலும் உச்சநீதிமன்றத்தில் முந்தைய விசாரணையின் போது, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருக்கும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மீது எந்த ஒரு தாமதமும் செய்யமாடோம் என்று பாலிநாரிமன் உறுதியும் அளித்திருந்தார். இப்போது ஆச்சரியமளிக்கும் வகையில் மேல்முறையீட்டு மனுவை முன்னரே விசாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கிறார்.
போட்டியிட முடியாத ஜெ.
ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளதால் அவரால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இருப்பினும் உச்சநீதிமன்றமே ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைத்தாலும் கூட அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதுதான்.
பெரும் நம்பிக்கை போல..
ஆனாலும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவாங்கிவிட முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றனர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள். அவர்களது நம்பிக்கையைப் பார்த்தால் 2016 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு இருக்கும் தற்போதைய தடைகளைத் தகர்த்துவிட்டால் தேர்தலில் அனுதாப அலை உருவாகும் என்பதாகத்தான் இருக்கிறது.
3 மாதத்துக்குள் முடிக்கனுமே..
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்கவும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும் கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும். ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தரப்போது 3 மாதங்களுக்குள் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடித்தாக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
3 ஆண்டுகாலம் காத்திருக்கனுமே..
ஒரு குறிப்பிட்ட தேதியில் விசாரணையை தொடங்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதை யாரும் தடுக்க முடியாதுதான்.. அப்படியே உத்தரவிட்டாலும் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதற்கே 3 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும்.
கர்நாடகா ஹைகோர்ட் பொசிஷன்
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தற்போதைய நிலையில் 2010, 2011ஆம் ஆண்டு மேல்முறையீட்டு வழக்குகளே இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதனால் இதர நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளுக்கு முன்னதாக விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால்தான் ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அது உச்சநீதிமன்றத்தின் கையில்தான் இருக்கிறது!
முன்கூட்டி விசாரணைக்கு உத்தரவிடுமா?
அதே நேரத்தில் பல ஆண்டுகளாக மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது புதியதாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் முன்னுரிமை கொடுக்கவும் யோசிக்கலாம். ஏனெனில் நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுதாரர்கள் எங்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள் என்று உச்சநீதிமன்றத்தை நாடினால் அது அவமானமாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்வோம்...
மோசமான முன்னுதாரணம்..
உச்சநீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அது மிகவும் தவறான முன்னுதாரணமாகியும் விடும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையையும் இது மாற்றிவிடும். அத்துடன் ஊழல் அரசியல்வாதிகள் இந்த வழக்கையே முன்னுதாரமாகக் கொண்டு தங்களது மேல்முறையீட்டு மனுக்களையும் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மனு போடச் செய்வார்கள்.
மீண்டும் முதல்வராக ஆசை...
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் மீண்டும் முதலமைச்சராக உட்கார்ந்து அதிகாரம் செலுத்தியாக வேண்டும் என்பதைத் தவிர இப்படி அவசரம் காட்டுவதற்கு வேறு காரணமே இல்லை. ஜெயலலிதா சிறையில் இருந்த போது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி விரைவாக ஜாமீன் பெற முயற்சித்ததெல்லாம் ஓகே.. ஆனால் இப்போது என்ன அவசரம்?
பல்லாயிரம் பக்க ஆவணங்கள் இருக்கே
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன்பு பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன்பாக உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளத்தான் செய்யும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பவானிசிங் சொல்வது என்ன?
இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானிசிங் கூறுகையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். உச்சநீதிமன்றம் எந்த தேதியை குறிப்பிட்டாலும் அப்போது நாங்கள் ஆஜராகி வாதடுவோம் என்கிறார்.
அத்துடன் ஊழல் தடுப்புச் சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகளுக்கு கால அவகாசம் வழங்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இது அரிதான வழக்கு.. முன்னுரிமையும் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறினால் அந்த அவசரத்துக்காக காரணத்தை எதிர்தரப்பு நிரூபிக்கவும் வேண்டும். இருப்பினும் இப்படி செய்வதை நிச்சயம் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாகத்தான் எடுத்துக் கொள்வார்கள் என்கிறார் பவானிசிங்.
உயர்நீதிமன்றம் கால நீட்டிப்பு கேட்கலாமே
பொதுவாக உச்சநீதிமன்றமானது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிடலாம். அதே நேரத்தில் அந்த காலத்தில் விசாரணையை முடிக்க முடியாத போது உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தில் கால அவகாச நீட்டிப்பையும் கோர முடியும். என்ன காரணங்களால் விசாரணையை முடிக்க முடியவில்லை? எதற்காக நீட்டிக்க வேண்டும் என்று கூறி அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரவும் முடியும்.
தீர்ப்புக்கு அவகாசம் வேண்டும்
3 முதல் 5 மாதங்களில் பொதுவாக 25 முறையாவது விசாரணை நடைபெற்றால்தான் ஒரு வழக்கின் விசாரணையை முடிக்க முடியும். விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பு தேதி குறித்து பொதுவாக நீதிபதிகளுக்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படுவதில்லை. ஏனெனில் இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு எழுவதுவதற்கு அவருக்கும் கால அவகாசம் தேவை என்பதால்...
எத்தனை எத்தனை இழுத்தடிப்புகள்
ஜெயலலிதா மீதான வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்ற வழக்கு. இந்த வழக்கை பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களே இழுத்தடித்திருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையில் நிலுவையில் இருந்தபோது 2 முறை முதல்வராகவும் ஜெயலலிதா இருந்தார் என்பதை மறந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை இழுத்தடிக்க தீர்ப்புக்கு முன்புவரை ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் முயற்சித்ததெல்லாம் மிக மோசமான முன்னுதாரணம். ஆங்கிலம் தெரியலை.. தமிழில் மொழிபெயர்க்கனும் எனப் பல பல காரணங்களை இழுத்தடிப்புக்கு கூறினார்..
காலமும் மாற காட்சிகளும் மாறின..
ஆனால் காலமும் மாற காட்சிகளும் மாறியிருக்கிறது.. 18 ஆண்டுகாலம் யார் வழக்கை இழுத்தடித்தார்களோ அவர்களை மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும்; விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆலாய்ப் பறப்பது விந்தையிலும் விந்தையே!!