ஆட்சிக் கட்டிலில் அதிக நாட்கள்.. வரலாறு படைத்த "செஞ்சுரியன்" ஜெயலலிதா!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி பதவியில் 100 நாட்களை இன்று தொட்டுள்ளது. இதை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மேலும் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமையை அவர் எட்டியுள்ளார். இதுவரை இந்த சாதனையை டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தான் வைத்திருந்தார். அதை ஜெயலலிதா தாண்டியுள்ளார்.
பல்வேறு தடைகள், வழக்குகளைத் தாண்டி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்து மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதா தனது ஆட்சியில் 100 நாட்களை இன்று தொட்டுள்ளார். இதையொட்டி அரசு சார்பில் அதிமுக ஆட்சியின் 100 நாள் சாதனைகள் குறித்த பட்டியல் விளம்பரமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் சாதனையை முறியடித்துள்ளார் ஜெயலலிதா. முதல்வர் பதவியில் அதிக நாட்கள் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமை ஷீலா தீட்சித்திடம் இருந்தது. அவர் மொத்தம் 5504 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தார்.
அதை தற்போது ஜெயலலிதா தாண்டியுள்ளார். அவர் முதல்வர் பதவியில் 5509வது நாளாக நீடிக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் முதல்வராக அவர் உருவெடுத்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் இப்போதைக்கு யாருமே இல்லை என்பதால் நீண்ட காலத்திற்கு இந்த சாதனை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5வது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதா 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். எம்.ஜி.ஆர் பாணியிலான திட்டங்களையும், இலவசத் திட்டங்களையும் அதிக அளவில் அமல்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக ஜெயலலிதா பெயரிலான அம்மா திட்டங்கள் ஜெயலலிதா ஆட்சியின் முக்கிய அம்சமாக, அடையாளமாக மாறியுள்ளது.
இந்தியாவில் உள்ள பெண் முதல்வர்களில் முக்கியமானவராகவும் திகழும் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் தற்போது (ஷீலா தீட்சித்தைத் தவிர்த்துப் பார்த்தால்), மாயாவதி (2562), ராப்ரி தேவி (2746), உமா பாரதி (259), வசுந்தரா ராஜே சிந்தியா (2829), மமதா பானர்ஜி (1930) ஆகியோர் உள்ளனர்.
அனந்தி பென் படேல், மகபூபா முப்தி ஆகியோர் இன்னும் 1000 நாட்களைக் கூடத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.