ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்யுங்கள்.. கர்நாடக முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம்
சென்னை: நீதியின் ஆட்சியை நிலைநாட்ட, ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடித அம்சங்கள் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்து அளித்த தீர்ப்பில் தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீதிமன்றம் மீது சந்தேகம்
நீதிமன்ற நடவடிக்கைகள் மீதே மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்த வழக்கில் உயர்நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இரண்டு நீதிமன்றங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் உண்மை எது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பு கர்நாடக அரசுக்கு உண்டு என்பது தாங்கள் அறிந்ததுதான்.
மக்களுக்கு சந்தேகம்
இந்த தீர்ப்பில் ஜெயலலிதா தவறே செய்யவில்லை என்று நீதிபதி குறிப்பிடவில்லை. மாறாக, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த பணம் 10 சதவீதத்திற்குள் இருப்பதால், விடுவித்துள்ளதாகத்தான் குறிப்பிட்டுள்ளார். இப்போது கணக்கீடுகளில் தவறு இருப்பதாக கூறப்படுவதால், இது சுமார் 75 சதவீதம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அதன் அடிப்படையில் ஜெயலலிதா தண்டிக்கப்படலாம் என்றும் ஒரு ஐயப்பாடு மக்களுக்கு வந்துள்ளது.
சட்டத்தின் ஆட்சி
எனவே, இந்த வழக்கில் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஐயத்தை போக்கும் வகையில் மேல்முறையீடு செய்வதுதான் தங்களின் தார்மீக கடமையாகும். எனவே சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடும் வவகையில், உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைவர்கள் வலியுறுத்தல்
ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் இதே கோரிக்கையை வலியுறுத்தி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வாயிலாக கேட்டிருந்தார். விஜயகாந்த் தற்போது சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், கர்நாடக அரசு இதுவரை மவுனத்தை கலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.