மெட்ரோ ரயிலில் பயணிக்கு 'பளார்' விட்ட மு.க. ஸ்டாலின் - ஜெயலலிதா கடும் கண்டனம்!
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது பயணி ஒருவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறைந்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கண்ணியத்தை மு.க.ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயிலை முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நேற்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
பளார் விட்ட ஸ்டாலின்
அப்போது சக பயணி ஒருவரை கன்னத்தில் மு.க.ஸ்டாலின் அறைந்ததாக கூறி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்நிலையில் பயணியை கன்னத்தில் அறைந்த ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்டாலினுக்கு கண்டனம்
அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.
கண்ணியத்தோடு நடங்க..
இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் ஆதாயம் தேட முடியாது
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உரிய அக்கறை செலுத்தாமல், நான்காண்டுகளில் 3 சதவீதப் பணிகளே முடித்த முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினும், தற்போது முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து பயணிகள் சேவை துவக்கப்பட்டுள்ள இந்த புகழுக்கு, எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது, அரசியல் ஆதாயமும் தேட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.