அதிமுக மா. செ நியமனம்... புதுமுகங்களுக்கு அடித்தது யோகம்...தப்பிப் பிழைத்த சின்னையா, ரமணா!
சென்னை: தமிழகம் முழுவதும் 50 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
இதில் புதியவர்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பழையவர்கள் பலரைக் காணவில்லை.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் புதிய மாவட்ட செயலாளர்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது அதிமுக.
இதற்கான தேர்தல் 14 கட்டங்களாக நடைபெற்றது. தற்போது அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில்...
அதன்படி, சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 4 பேரையுமே மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்துள்ளார் ஜெயலலிதா.
விருகை ரவி...
தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த விருகை வி.என்.ரவி மாற்றப்பட்டு புதிய மாவட்டச் செயலாளராக சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். விருகை ரவி நீண்ட காலம் லைம்லைட்டில் இருந்தவர்.
கலைராஜன்...
தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. மாற்றப்பட்டு கவுன்சிலர் தி.நகர் சத்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெற்றிவேல்...
வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த டி.ஜி.வெங்கடேஷ் பாபு மாற்றப்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெற்றிவேல் ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகங்கா...
வடசென்னை தெற்கு பாலகங்கா மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் முன்னாள் எம்.எல்.ஏ. பூங்காநகர் சீனிவாசன் அந்த பதவியில் அமர்ந்துள்ளார். பாலகங்கா வட சென்னையின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர் ஆவார்.
அமைச்சர் மோகன்...
இதேபோல், அமைச்சர் மோகனின் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறி போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளவாய்சுந்தரம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தண்டரை மனோகரன்...
காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த சி.வி.என். குமாரசாமி மாற்றப்பட்டு தண்டரை மனோகரன் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதியவர்கள்...
பல மாவட்டங்களில் மீண்டும் பழைய முகங்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேசமயம் பதவிக்காக காத்திருந்த "பழசுகள்" கவலை அடைந்துள்ளனர்.
இவங்கெல்லாம் தப்பிச்சாட்டாங்க!
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் டி.கே.என்.சின்னையா, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.