கதிரவன் இடத்தில் கருணாஸை வைத்த ஜெயலலிதா...!
சென்னை: நடிகர் கருணாஸுக்கு நல்ல நேரம் போல. நேற்றுதான் முதல்வர் ஜெயலலிதாவை முதல் முறையாக ஒரு அமைப்பின் தலைவராகப் போய்ப் பார்த்தார். இன்று அவரை திருவாடானை வேட்பாளராக்கி விட்டார் ஜெயலலிதா.
முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் கருணாஸ். இதனால் அவரும், அவரைச் சார்ந்தவர்களும் உற்சாகமாகியுள்ளனராம். வாழ்த்துகள் குவிந்து வருகின்றனவாம்.
முன்பு போல பீக்கில் இல்லாத நடிகர் கருணாஸ். இடையில் நடிகர் சங்க அரசியலில் குதித்து அதில் கரை சேர்ந்தார் தற்போது தீவிர அரசியலில் களம் புகுந்துள்ளார். இனி நடிப்பு, நடிகர் சங்கம், அரசியல் என கலந்து கட்டி அடிக்க அவர் தயாராகி வருகிறார்.
முக்குலத்தோர் புலிப்படை
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தனது அமைப்பின் ஆதரவைத் தெரிவித்தார்.
திருவாடானை
இந்த நிலையில் இன்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் கருணாஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசார பீரங்கி மட்டும் அல்ல
முன்னதாக அவரை பிரசார பீரங்கியாக மட்டுமே அதிமுக பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக சீட்டைக் கொடுத்து குஷியைக் கிளப்பியுள்ளார் ஜெயலலிதா.
ஜாதி வாக்குகள்
கருணாஸ் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். எனவே அதன் அடிப்படையில் அவருக்கு சீட் தரப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. மேலும் திமுகவுக்கு எதிராக வலுவான பிரசார பீரங்கியாகவும் அவர் இறக்கி விடப்பட்டுள்ளார்.
மதுரை சுற்று வட்டாரம்
பார்வர்ட் பிளாக் கட்சிக்கு சீட் கொடுக்காமல் கருணாஸுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தது ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் கதிரவன் இடத்தில் கருணாஸை அவர் வைத்துள்ளதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகளில் தொய்வு வராது என்பது ஜெயலலிதாவின் கணிப்பாகும்.