ஜெயலலிதா தானே உணவு உட்கொள்கிறார்: அப்போலோவில் பொன்னையன் பேட்டி !
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கான உணவை அவரே எடுத்துக்கொள்வதாகவும் அதிமுக செய்தித்தொடர்பாளரும், அதிமுகவின் மூத்த தலைவருமான பொன்னையன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்போலோ மருத்துவமனை முன்பும் ஏராளமான பெண்கள் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு அதிமுக செய்தித்தொடர்பாளரும், அதிமுகவின் மூத்த தலைவருமான பொன்னையன் ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்பல்லோ வந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்துக் கொள்கிறார். அவர் விரைவில் மக்கள் பணியாற்ற மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.