தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி திடீர் டிஸ்மிஸ்- கட்சிப் பதவியும் அதிரடியாக பறிப்பு!!
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில்பாலாஜி திடீரென இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா கடந்த மே மாதம் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது முந்தைய பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இருந்த ஆனந்தன், செந்தூர் பாண்டியன் இருவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வசம் இருந்த போக்குவரத்துத் துறை கூடுதல் பொறுப்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கமணி வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிப் பதவி
இதனிடையே அண்ணா திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செந்தில் பாலாஜி வகித்து வந்த கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாகவும் கரூர் மாவட்ட அதிமுக பணிகளை அமைச்சர் தங்கமணியே இனி கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகாலமாக பல முறை அதிமுக அமைச்சரவை மாற்றப்பட்ட போதும் செந்தில் பாலாஜி மட்டும் மாற்றப்படாமல் இருந்து வந்தார். அவரது இலாகாவும் மாற்றப்படாமல் இருந்து வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது தாடி வளர்த்து, கோயில் கோயிலாக காவடி எடுத்து அதீத பற்றை வெளிப்படுத்தியிருந்தவர் செந்தில் பாலாஜி.
தற்போது திடீரென அமைச்சரவையில் இருந்தும் கட்சிப் பதவியில் இருந்தும் செந்தில் பாலாஜி அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.