அதிமுகவினருக்கு கிட்டாத 'அம்மா' தரிசனம்! தொண்டர்கள் அப்செட்!!
சென்னை: எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் ஜெயலலிதாவை பார்க்கலாம் என்று காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மெரினா கடற்கரைக்கு வராமல் போயஸ்கார்டன் இல்லத்திலேயே எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்தூவி ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தியதால், அதிமுகவினர் அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளிலாவது அம்மாவின் தரிசனம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர் அதிமுகவினர்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூரு, பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்துள்ள ஜெயலலிதா, போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டிலேயே தங்கியிருக்கிறார்.
முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தையும், அமைச்சர்களையும் அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகள் வழங்குவதோடு சரி, வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை. வீட்டை விட்டு வெளியேறுவதும் இல்லை.
அவர் மீது அதிக பற்று கொண்ட அ.தி.மு.க.,வினருக்கு இது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா வெளியில் வந்தால் அவரை பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் நினைவு நாளில் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு ஜெயலலிதா வரக்கூடும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்த நாளும் நேற்று வந்தது.
எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும்அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆரின் சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவை எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களுக்கு இது ஏமாற்றத்தையே கொடுத்தது.
ஜெயலலிதா, தனது போயஸ் கார்டன் வீட்டிலேயே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
வழக்கில் இருந்து விடுதலையாகும் வரை வெளி உலகத்தை பார்ப்பதில்லை என்று ஜெயலலிதா சபதம் எடுத்துள்ளாரோ என்னவோ? ஆனால் ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் தலைமைக்கழகம் வருவாரா ஜெயலலிதா என்று மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் அதிமுகவினர். தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?.