கேவலமான ஆட்சின்னு சொல்வீங்களா.. விவேக்கைப் பிடித்து வறுத்தெடுத்த எடப்பாடியார்!
ஜெயா டிவியில் தமது அரசை விமர்சித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
சென்னை: தமது தலைமையில் நடைபெறுவது கேவலமான ஆட்சி என ஜெயா டிவியிலேயே விமர்சிப்பதா? என அதன் பொறுப்பாளரான இளவரசி மகன் விவேக்கிடம் எகிறியிருக்கிறது எடப்பாடி தரப்பு.
போயஸ் கார்டனில் தீபாவும் தீபக்கும் மோதிக் கொண்டிருந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டிருந்தன. நேற்று மாலை 6.15 மணியளவில் தமிழகப் பிரச்னைகள் குறித்து ஜெயா டி.வியில் விவாதம் நடைபெற்றது.
வழக்கம்போல அ.தி.மு.க தினகரன் அணிக்கு ஆதரவாகப் பேசும் ஆட்களை மட்டுமே களமிறக்கும் ஜெயா டி.வி, நேற்று வேறு சிலரையும் இறக்கியது. அந்த நபரும் நான் நடுநிலையோடுதான் பேசுவேன்' எனக் கூறிக் கொண்டு அமர்ந்தார்.
திடீர் விமர்சனம்
நிகழ்ச்சியை மோகன்ராஜ் என்பவர் நடத்திக் கொண்டிருந்தார். இதில் பேசிய புதிய நபர், இங்கு நடப்பது என்ன ஆட்சியா? ஓர் அமைச்சர் ஆமாம் என்கிறார். இன்னொருவர் இல்லை என்கிறார். அரசின் ஏதாவது ஒரு துறையைப் பற்றி இவர்கள் பேசுகிறார்களா? அதைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி இவர்களுக்கு இருக்கிறதா? 'டி.டி.வியோடு போவேன்' என்கிறார் ஒருவர். இன்னொருவர், 'போகக் கூடாது' என்கிறார். ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கேவலமாக நினைக்கிறார்கள்.
நடப்பது ஆட்சியா?
சசிகலா படத்தை தலைமைக் கழகத்தில் எடுத்தார்கள். அவரை அமைச்சர்கள் சிலர் வசை பாடினார்கள். எல்லாம் சரி. இதே சசிகலா காலில் சில மாதங்களுக்கு முன்பு இந்த அமைச்சர்கள் விழுந்தார்களே? அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். இங்கு நடப்பது ஆட்சியா? என்றெல்லாம் ஏகத்துக்கும் எகிறினார்.
பாதியிலேயே நிகழ்ச்சி ரத்து
இதனால் இந்த நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் சென்றுள்ளது. அவர் பூங்குன்றன் மூலமாக விவேக்கை பிடித்து காய்ச்சிவிட்டாராம்.
கொங்கு கோஷ்டி ஷாக்
எடப்பாடி ஆட்சிக்கு எதிராக அணி திரட்டும் வேலைகளைத் தினகரன் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறது கொங்குகோஷ்டி. இது கொங்கு மண்டல அமைச்சர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.