2 வருடங்களுக்கு முன் கட்டி.. மக்கள் பயன்படுத்த முடியாமல் தடுக்கப்பட்ட பாலத்தைத் திறந்து வைத்த ஜெ.!
சென்னை: தமிழகத்தில் ரூ. 1002 கோடி மதிப்பிலா புதிய மேம்பாலங்கள், சாலைப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதேபோல பல புதிய பாலங்களையும் அவர் இன்று திறந்து வைத்தார்.
அதேசமயம், அவர் திறந்து வைத்த தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மேம்பாலம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2 வருடமாக பயன்பாட்டில் உள்ள பழைய பாலத்தையும் இன்று ஜெயலலிதா திறந்து வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் நகர்புற பேருந்து நுழைவுவாயில் காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் 93 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டிலான மேம்பாலம்; சென்னை, வேளச்சேரி விஜயநகர பேருந்து நிலையம் அருகில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலம்;
காஞ்சிபுரம் மாவட்டம், மேடவாக்கத்தில் 146 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலம்; சேலம் மாவட்டம் சேலம் மாநகரில் ஐந்து சாலைகள் சந்திப்பில் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு அடுக்கு சாலை மேம்பாலம்;
விழுப்புரம் மாவட்டம், ஆறுத்தாங்குடி ஓடையின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; திருவாரூர் மாவட்டம், தட்டாங்கோவிலில் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்;
கடலூர் மாவட்டம் மேலூரில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம், நடராஜபுரத்தில் உப்பனாற்றின் குறுக்கே 10 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்;
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 15 க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரத்தில் 36 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 126 மற்றும் 127க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; கண்ணடிக்குப்பத்தில்
25 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 78 க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் 30 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 7க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் 59 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 2, 27 மற்றும் 308க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்;
தஞ்சாவூர் மாநகரில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட புறவழிச்சாலை; சேலம் மாவட்டம் எடப்பாடியில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட புறவழிச்சாலை; தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரிய குளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 51 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சாலை மறுகட்டமைக்கும் பணி;
என மொத்தம் 1002 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 பாலங்கள், 5 ரயில்வே மேம்பாலங்கள், 4 மேம்பாலங்கள், 4 சாலை பணிகள் ஆகிய பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
புதிய பாலங்கள் திறப்பு
இதுதவிர திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள ரூ. 75.47 கோடியிலான மேம்பாலம், திருச்சி ஓடத்துறை ரயில்வே மேம்பாலம், மோகனூர் வாங்கல் காவேரிப் பாலம், ஏரல் உயர் மட்டப் பாலம், எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை உள்ளிட்ட ரூ. 599.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 சாலைத் திட்டங்கள், 7 கட்டடங்களையும் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பழைய பாலம்
இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட ஏரல் உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று அந்த பாலத்தை திறந்து வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், பெரு வணிக நகரமாகும். இங்கு குரும்பூர் உள்ளிட்ட தென்பகுதி கிராமங்களிலிருந்து தினமும் தொழில் மற்றும் வணிக காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதி மக்கள் தங்களின் போக்குவரத்துக்காக தாமிரபரணியில் உள்ள பழைய தாம்போதி பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும்போது வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆத்தூர், ஆழ்வார்திருநகரி பாலம் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
இதனால் ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நபார்டு திட்டத்தின் மூலம் ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.16.39 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் 2012ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி நாட்டப்பட்டு அன்றே பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 18 மாதங்களில் இப்பாலம் கட்டி முடிக்கப்படும் என்றனர். 2014ம் ஆண்டு ஜனவரியில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டன.
ஆனால் பாலத்தின் தென்பகுதியில் இணைப்புச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இணைப்புச்சாலைக்கு வனத்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினரும் அந்த கடிதத்தை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்திருப்பதாக வனத்துறையினரும் சொல்லி நாட்களை கடத்தி வந்தனர். இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இணைப்புச்சாலை இல்லாததால் தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழைய தாம்போதி பாலத்தையும் பயன்படுத்த முடியாமல், புதிய உயர்மட்ட பாலத்திலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.
புதிய பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்திலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர பல்வேறு கட்சிகளும் இணைப்புச்சாலை அமைக்க வலியுறுத்தின. இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில் வனத்துறை அனுமதி கிடைத்ததும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. நவம்பர் முதல் வாரம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டன.
நவம்பர் 9ம் தேதி தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நவம்பர் 10,11,12 தேதிகளில் மழை வெள்ளம் குறைந்து தாம்போதி பாலத்தில் தண்ணீர் வடிந்ததும் உயர்மட்ட பாலம் வழியாகத் தான் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், டூ வீலர்கள் இயக்கப்பட்டன. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள் நவ.13ம் தேதி மீண்டும் ஜேசிபி மூலம் பால இறக்கத்தில் ராட்சத பள்ளம் தோண்டி போக்குவரத்தை துண்டித்துவிட்டனர். இதனால் தாம்போதி பாலம் வழியாக தட்டுத்தடுமாறி பஸ்களும், இதர வாகனங்களும் சென்றுவந்தன.
நவ.15ம் தேதி தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தாம்போதி பாலம் மூழ்கியது. வழக்கம்போல் புதுப்பாலத்தில் பள்ளத்தை பொதுமக்களே நிரப்பி சீரமைத்து போக்குவரத்தை தொடங்கினர். இதன்பிறகு தாம்போதி பாலத்தில் வெள்ளம் குறையவே கற்கள், ஜல்லிகளை குவித்து போலீசார் அடைப்பு ஏற்படுத்தி மக்கள் செல்ல தடை விதித்தனர். இதை மீறி அந்த பாலத்தின் வழியாக சென்றவர்களை அதிமுகவினர் தாக்கினர்.
இதனிடையே நவ.19ம் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படவே மீண்டும் உயர்மட்ட பாலத்தின் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டது. தாம்போதி பாலத்தில் வெள்ளப் பெருக்கு குறைந்ததும் போலீசார் புதுப்பாலத்தை அடைப்பதும், கூடும் போது புதுப்பாலத்தை பொதுமக்களே திறப்பதுமாய் இருந்தது.
இதன்பிறகு புதுப்பாலத்தை அடைப்பதை நெடுஞ்சாலைத்துறையினரும் போலீசாரும் கைவிட்டனர். இணைப்புச் சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது புதுப்பாலத்தில் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.
ரோட்டின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் வடக்கு பகுதி இணைப்புச் சாலையில் இன்னும் கற்கள் பரப்பப்படாமல் கிடக்கிறது. இந்நிலையில் இந்த பாலத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் இன்று திறந்துவைத்தார்.
மக்களுக்காக கட்டப்பட்ட பாலத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல் அட்டூழியம் செய்து அலைக்கழித்த பின்னர் இன்று திறந்து வைத்துள்ளது தமிழக அரசு...!