ஜெயலலிதா அப்பல்லோவில் மயக்க நிலையிலேயே அனுமதிக்கப்பட்டார் - தமிழக அரசு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதியன்று மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலிதாவிற்கு 5 முறை சென்னை வந்து சிகிச்சை அளித்தனர். அது தொடர்பான அறிக்கையை இன்று டெல்லியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் அளித்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை விபர அறிக்கையையும், எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையையும் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு முதல்வரின் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப அவசர அழைப்பு வந்தது. ஆம்புலன்ஸ் சென்ற போது மயக்க நிலையில் ஜெயலலிதா இருந்தார் என்று அப்பல்லோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மயக்க நிலையில் ஜெயலலிதா
அப்பல்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில் போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தது முதல் அவருக்கு இருந்த நோய் தாக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடித்துடிப்பு
செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது நாடித்துடிப்பு 88 நிமிடம் ரத்த அழுத்தம் 140 / 70 என்று இருந்தது. அவரது ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருந்தது.
நோய் தாக்கம்
ஜெயலலிதாவுக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தன. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைப்பது மற்றும் நுரையீரல் பிரச்சனையை இருந்தது என்று அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குரலை உணரவில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ஆக்சிஜன் குறைபாடினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மயக்க நிலையில் இருந்த அவரால் யாருடைய அழைப்பையும் உணர முடியவில்லை என்று அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதயத்துடிப்பு
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். பின்னர் லண்டன் டாகடர் ரிச்சர்டும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மேலும் தமிழக அரசு கேட்டு கொண்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்றும் அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.