உங்கள் வரவு நல்வரவாகட்டும், இனி அரசியலில் வெற்றியே: புதிய உறுப்பினர்களுக்கு ஜெ. உரை
சென்னை: அனைவரையும் அன்போடு அரவணைத்து செல்லும் உண்மையான ஜனநாயக இயக்கம் அதிமுக. அதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் அரிசயலில் வெற்றியை காண்பீர்கள் என்று பிற கட்சிகளில் இருந்து ஆளும்கட்சியில் சேர்ந்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திமுக, மதிமுக, த.மா.கா, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 3 ஆயிரத்து 500 பெண்கள் உள்பட 31 ஆயிரத்து 834 பேர் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.
அவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி கட்சியின் தலைமை அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கலந்து கொண்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா கூறுகையில்,
வரவேற்கிறேன்
அதிமுக என்னும் மகத்தான பேரியகத்தில் சேர வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன். திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்த 31 ஆயிரத்து 834 பேர் இன்று அதிமுகவில் சேர்ந்துள்ளீர்கள்.
நல்வரவு
அதிமுகவுக்கு வந்துள்ள உங்களின் வரவு நல்வரவு ஆகட்டும். இனி உங்கள் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும். இன்றைக்கு இருக்கும் உற்சாகத்தோடு என்றும் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுக
அனைவரையும் அன்போடு அரவணைத்து செல்லும் உண்மையான ஜனநாயக இயக்கம் அதிமுக. அதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் அரிசயலில் வெற்றியை காண்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழக மக்கள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ என்னையே அர்ப்பணித்து அயராது உழைத்து வருகிறேன். என் தலைமையிலான அரசு மக்களுக்கு ஆற்றி வரும் மகத்தான பணி உங்களுக்கு தெரியும். அவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். விரைவில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.