"ஜெ. மீண்டும் முதல்வர்"- பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ஓ.பி.எஸ்-ன் "எங்கம்மா சபதம்"!
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
அரசின் உயிராகவும், உணர்வாகவும் உள்ள எங்களின் கருணை மிகுந்த தலைவி, எங்களின் செயல்பாட்டிற்கான கொள்கையாக வகுத்துத் தந்துள்ளார். அதனால்தான், உன்னத தலைவியாகிய புரட்சித்தலைவி அம்மாவின் எழுச்சிமிகு ஆற்றலினால் வழிநடத்தப்படும் இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி அம்மாவின் வழி காட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
புரட்சித்தலைவி அம்மா காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் புரட்சித்தலைவி அம்மா முதல் அமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.