தமிழகத்தில் நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்கள்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: சென்னை: சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள 10 திட்டங்களை உடனே நிறைவேற்றக் கோரி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகம் எதி்ர்பார்க்கும் ரயில்வே திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 20 தமிழக திட்டங்கள் பலமுறை பட்ஜெட்டில் அறிவித்தும் நிறைவேற்றப்படவில்லை என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தின் தொலைநோக்குத் திட்டம் 2023'ல் அறிவிக்கப்பட்டுள்ள 10 முக்கியமான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
சென்னை- தூத்துக்குடி இடையேயான பிரத்யேக சரக்கு வாகனப் பாதை, சென்னை-மதுரை-கன்னியாகுமாரி இடையேயான விரைவான பயணிகள் ரயில், மதுரை- கோயம்புத்தூர் இடையே விரைவான பயணிகள் ரயில் ஆகிய திட்டங்களை ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு அமைப்பு ஒன்றை உருவாக்காவும் அரசு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் சிறப்பு அமைப்பை உருவாக்குவதற்காக மத்திய அரசுடன் மாநில அரசுகள் செய்யும் ஒப்பந்தத்திற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகள் மாநில அரசுக்கு ஆதரவாக இல்லை.
ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு இடங்களை வழங்கும் போது அதற்கு ஈடாக பணமாகவோ அல்லது ரயில்வே அல்லது மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்களையோ மாநில அரசுக்கு வழங்க வேண்டும். மேலும், திட்டங்களை செயல்படுத்தும் சிறப்பு அமைப்பில் மாநில அரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.