அப்பல்லோவில் 22வது நாள்... எப்போது வீடு திரும்புவார் ஜெயலலிதா?
சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 22 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை அதிமுக தொண்டர்களாலும் தமிழக மக்களாலும் பார்க்க முடியவில்லை. முதல்வரின் நிலைமை அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
நீண்ட ஆலேசனைக்குப் பிறகு முதல்வரிடம் இருந்த பொறுப்புகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை கனத்த மனத்துடன் அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். இரண்டு முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் இம்முறை முதல்வரின் பொறுப்புகளை கவனிக்க இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்ற தகவல்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி இரவு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் திடீரென ஆளுநரைப் பார்க்க கிளம்பிப் போனதும், பல்வேறு பேச்சுகள் கிளம்பின.
பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வர், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் என்பது வரை அரசியல் வட்டாரத்தில் பேச்சு பரவியது. காவிரிப் பிரச்னை தொடர்பாக விவாதிக்கத்தான் அமைச்சர்கள் வந்தர்கள் என அத்தனை யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு. அதில் அப்படிச் சொல்லப்பட்டிருந்தாலும், முதல்வரின் உடல்நிலை பற்றித்தான் ஆளுநர் அதிகநேரம் பேசினாராம்.
ஆளுநரின் அட்வைஸ்
மேடம் ஹெல்த் இருக்கும் கண்டிஷன்ல அவங்களுக்கு ரெஸ்ட் அவசியம் தேவை. அவர் வீடு திரும்பினாலும் வழக்கமான பணிகளை உடனே கவனிக்க முடியாது. ஏற்கனவே 2 வாரங்களுக்குமேல் ஆகிடுச்சு. அரசுப் பணிகள் முடங்கிவிட்டதாக எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வரை உடனடியாக நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்று ஆளுநர் சொன்னதாகச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பன்னீரும், எடப்பாடியும், அம்மா இப்படி இருக்கும்போது எப்படி நாங்களாக ஒரு முடிவு எடுக்க முடியும். கொஞ்சம் வெய்ட் பண்ணலாம்.. என்று சொல்லியிருக்கிறார்கள்.
பொறுப்புகள் மாற்றம்
அதற்கு ஆளுநர் அவங்க உடல்நிலை சரியாக இருந்தால் நான் இப்படி உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதுவும் 2 வாரங்களை கடந்துவிட்டதால்தான் சொல்றேன். நீங்க பேசிட்டுச் சொல்லுங்க! என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இதன்பிறகே பொறுப்பை மாற்றி ஒப்படைக்கும் முடிவை எடுத்தாராம் சசிகலா.
சசிகலா புஷ்பாவின் அட்டாக்
இதனிடையே சசிகலா புஷ்பா,டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில், சசிகலாமீது புகார்களை நேரடியாகவே கொட்டித் தீர்த்துவிட்டார். கட்சியும், ஆட்சியும் சசிகலா வசம் போய்விட்டது என்று சசிகலா புஷ்பா கூறியதை அடுத்து அப்பல்லோவில் தன் உறவினர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் என்ன பேசினார்கள் என்ற தகவல் எங்கும் கசியவில்லை. வழக்கமாக, கார்டனில் என்ன நடந்தாலும் தனக்கு நெருக்கமான சில நண்பர்களிடம் இளவரசியின் மகன் விவேக் பகிர்ந்துகொள்வார். ஆனால் நேற்று சசிகலாவுடன் நடந்த ஆலோசனைபற்றி அவர் நண்பர்களிடம்கூட எதுவும் பேசவே இல்லை.
பன்னீர் செல்வம் நியமனம்
திமுக தலைவர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மட்டும் தொடர்ந்து பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் இதுவரை நிர்வகித்துவந்த பொது மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைகளையும் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூடுதலாக நிர்வகிப்பார். அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்றும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
சசிகலா யோசனை
முதல்வர் ஜெயலலிதா வகித்த பொறுப்புக்களை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். காரணம், ஓ.பன்னீர்செல்வத்தின் மீது சசிகலாவுக்கு கோபம் இருந்தது. அமைச்சர்களில் பலர் தங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். அம்மாகிட்ட இருக்கும் பொறுப்பை வேறு யாருக்கு கொடுத்தாலும், அது அமைச்சர்களுக்குள் தேவை இல்லாத சச்சரவுகளை உண்டாக்கும். அதனால் ஓ.பி.எஸ்.கிட்டயே அந்தப் பொறுப்பை கொடுத்துடலாம். அவர்தான் ஏற்கனவே, அம்மாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் என்பதால், எந்த சர்ச்சையும் சிக்கலும் வராது என்று கூறிய பிறகுதான் ஆளுநர் மாளிகைக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பல்லோவில் ஆலோசனை
ஆளுநரிடம் இருந்து அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்துக்குமுன்பு பன்னீர்செல்வத்தை அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்துக்கு வரச்சொல்லி, சசிகலா சில விஷயங்களைப் பேசியுள்ளனர். பன்னீர்செல்வத்தை வரவழைத்து சசிகலா பேசியபோது சிவகுமார், விவேக், இளவரசி என சசிகலாவின் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் உடன் இருந்திருக்கிறார்கள். அதன்பிறகே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.
அம்மா நல்லா இருக்ககாங்க
அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 22 நாட்களாகிவிட்டது. வழக்கம் போல பரபரப்பாகவே காணப்படுகிறது கிரீம்ஸ் ரோடு, முதல்தளத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நின்று கொள்ள, இரண்டாவது தளத்தில் அமைச்சர்கள் பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நின்று கொண்டு, மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது வந்தால் ‘அம்மா நல்லா இருக்காங்க. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று சொல்கின்றனர்.
மருத்துவமனையில் 22 நாட்கள்
ஜெயலலிதா விரைவில் நலம்பெற்று வருவார் என்ற நம்பிக்கையிலேயே அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்த ஜெயலலிதா 22 நாட்களுக்குப் பின்னர் ஜாமீன் பெற்று வீடு திரும்பினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 நாட்களாகிவிட்டது எப்போது வீடு திரும்புவார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.