7 நாட்களில் முதல் முறை.. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சசிகலா #jayalalitha
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்த சசிகலா, முதல் முறையாக நேற்று இரவு மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். வேறு யாருக்கும் ஜெயலலிதாவுடன் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து ஒருவாரம் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா, 7 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
ஆனால் இரவு முழுக்க ஜெயலலிதா உடல் நிலை குறித்து விஷமிகள் வந்தி பரப்பி வந்த நிலையில், சசிகலா வெளியே சென்றார். முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா நலமாக இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.