ஒரே மேடையில் 14 அதிமுகவினர் குடும்ப திருமணம்: ஜெயலலிதா தலைமையில் நடந்தது
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைத்து, மணமக்களுக்கு ஆசி வழங்கினார். ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரம்மாண்ட மேடையில் நடைபெற்ற இந்த திருமண விழாவைக் காண ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற இருந்த திருமணம் சென்னையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை 45 நிமிட காலம் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் ஜெயலலிதா. அமைச்சர்கள் வீட்டு திருமணத்திற்கு மட்டும் நேரில் சென்று வாழ்த்தினால், மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்றும் வெள்ள நேரத்தில் ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டாம் என்று நினைத்து, திருமணத்தை ஒத்திவைக்க ஜெயலலிதா அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று 14 திருமணங்களை இன்று நடத்தி வைத்தார் ஜெயலலிதா. மணமக்களின் விபரங்கள்:
* அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் மகள் திருமணம்.
* திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜின் மகன் திருமணம். * தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள் திருமணம்.
* திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியனின் மகன் திருமணம்.
* அ.தி.மு.க. விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருமயம் தொகுதி சட்டசபை உறுப்பினருமான பி.கே.வைரமுத்துவின் மகள் திருமணம்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமியின் மகன் திருமணம்.
* நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், உதகமண்டலம் தொகுதி சட்டசபை உறுப்பினருமான புத்திசந்திரனின் மகள் திருமணம்.
* திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் மு.ராஜனின் மகள் திருமணம்.
* காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி கே.என்.ராமச்சந்திரனின் மகன் திருமணம்.
* வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய செயலாளரும், வாணியம்பாடி தொகுதி சட்டசபை உறுப்பினருமான கோவி.சம்பத்குமாரின் மகன் திருமணம்.
* திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் ஒன்றிய செயலாளரும், வந்தவாசி தொகுதி சட்டசபை உறுப்பினருமான செய்யாவூர் வே.குணசீலனின் மகன் திருமணம். * மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதி சட்டசபை உறுப்பினர் எம்.வி.கருப்பையாவின் மகள் திருமணம்.
* வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜா ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளரும், திருப்பாற்கடல் ஊராட்சி மன்றத் தலைவருமான எம்.ஜி.கே.தனஞ்செழியனின் திருமணம்.
* திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலின் மகள் திருமணம் நடைபெற்றது.
14 ஜோடிகளுக்கும் மங்கல நாண் எடுத்துக் கொடுத்த ஜெயலலிதா அவர்களுக்கு அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார். அதிமுகவினரை ஒரே இடத்தில் காண்பதில் மகிழ்ச்சி ஏற்படுவதாக கூறிய ஜெயலலிதா, இல்லறத்தில் மணமக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறினார்.