ஜெ. வை வாழ்த்தி, நடைபாதைகளில் அதிமுக கட்-அவுட்.. சென்னை மக்கள் அவதி
சென்னை: ஜெயலலிதாவை வாழ்த்தி அதிமுகவினரால் சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பெரும்பாலானவை விதிமுறைகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலேயே உள்ளன.
பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டித்த பிறகு, ஹைகோர்ட் விடுதலை செய்யும் இடைப்பட்ட 7 மாத காலமாக ஜெயலலிதா வெளியில் எங்கும் வரவில்லை. இந்நிலையில் இன்று பகல், 2 மணிக்கு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்த வீட்டை விட்டு வெளியே வருகிறார்.
இதையடுத்து புதன்கிழமை இரவு முதலே, அதிமுக தொண்டர்கள் சென்னை நகரம் முழுவதும், கட்அவுட்டுகளை வைக்க ஆரம்பித்துவிட்டனர். அண்ணா சாலை, சர்தார் பட்டேல் ரோடு, டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை, கத்தீட்ரல் ரோடு மற்றும் டிடிகே ரோடு ஆகியவற்றில் அதிகப்படியான கட்அவுட்டுகள் உள்ளன.
அதில் பெரும்பாலும், தனியார் இடங்களை ஆக்கிரமித்தோ, நடைபாதையிலோ அமைக்கப்பட்டுள்ளன. நடந்து செல்வோருக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சிட்டி முனிசிபல் கார்பொரேசன் சட்டம் 1919, தமிழ்நாடு நகர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம்-2003 உள்ளிட்டவற்றின் கீழ் தடை செய்யப்பட்ட இடங்களில் இந்த கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.