ஜெயலலிதா உடலை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்ததற்கு சசி செய்த பரிகாரம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அவர்களின் பாரம்பரிய முறைப்படி தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்ததன் காரணமாகவே அவரது தோழி சசிகலா சில பரிகார சடங்குகளை செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அவர் பின்பற்றிய நம்பிக்கையின்படி தகனம் செய்யப்படாமல் நல்லடக்கம் செய்யப்பட்டதன் காரணம் என்ன? - இந்தக் கேள்வி மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. அதற்கான சில விளக்கங்களும் முளைத்துள்ளன.
ஜெயலலிதா பிராமண இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது மூதாதையர்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
பொதுவாக பிராமணர்கள் இனத்தில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் வைதீக முறைப்படி அனைத்து விதமான சாஸ்திர - சம்பிரதாயங்களை கடைபிடிப்பார்கள். உயிரிழந்த அந்த ஆத்மா மேன்மை பெற ஹோமப் பரிகாரங்களும் செய்வதுண்டு. அப்பல்லோவில் உயிரிழந்த ஜெயலலிதாவிற்கு அவர்களது குல மரபுப்படி இறுதிச்சடங்குகள் போயஸ் தோட்டத்து வீட்டில் செய்யப்பட்டது.
உடல் நல்லடக்கம்
இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு உடலை எரித்து விடுவார்கள். உயிரிழந்த ஆத்மாவினால் வேறு எந்த பிரச்சனைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அந்த ஆத்மா மிக எளிதாக மறுபிறவி எடுப்பதற்காகவும் உடலை எரித்து விடும் சம்பிரதாயத்தை பிராமணர்கள் கடை பிடிக்கிறார்கள். ஆனால் இந்த சம்பிரதாயத்துக்கு மாறாக ஜெயலலிதாவின் உடல் நேற்று எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது பிராமணர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதாவின் விருப்பம்
இறுதி ஊர்வலத்துக்கு முன் ஜெயலலிதா உடல் தகனம் செய்யப்படும் என்றே நம்பப்பட்டது. ஆனால், எம்ஜிஆருக்கு பக்கத்தில்தான் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என ஜெயலலிதா விரும்பியதால், அவ்வாறு செய்யப்பட்டது என்பது பலர் கூறும் காரணமாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் நினைவிடம்
ஜெயலலிதா விருப்பத்தின் பேரில்தான் அவர் உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே தனக்கு நெருக்கமானவர்களிடமும், சில உயர் அதிகாரிகளிடமும், என் வாழ்க்கைக்கு வழி காட்டியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எனவே அவர் சமாதி அருகே என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
தகனம் செய்தால் பாதிப்பு
எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடலை தகனம் செய்யலாமா என்று அ.தி.மு.க. தலைவர்களும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். அப்படி தகனம் செய்தால் அது எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ள மார்பிள் அலங்காரங்களை நிரந்தரமாக மாசுபடிய செய்து விடும் என்று கூறப்பட்டது. இதனால் எம்.ஜி.ஆர். சமாதி அருகே தகனம் செய்யும் முடிவு கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பரிகாரம் செய்த அண்ணன் மகன்
தகனம் செய்யாமல் அடக்கம் செய்த காரணத்தால் சாஸ்திர - சம்பிரதாய ரீதியாக ஏதேனும் குறைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், ஜெயலலிதா உடல் சந்தனப் பேழைக்குள் வைக்கப்பட்டதும் பரிகார சடங்குகளை ஒரு அய்யர் மூலம் செய்ததாக கூறப்படுகிறது. தண்ணீர், பால், பூக்களை ஜெயலலிதா உடலைச் சுற்றி அவரது அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் மூலம் தூவ செய்து இந்த பரிகாரங்கள் நடந்தன.
ஆலோசனை சொன்ன ஸ்ரீரங்கத்து நபர்
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முக்கியமான ஒருவர், ஜெயலலிதா உடல் எரிக்கப்படாததால் வைதீக முறையில் என்னென்ன பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அந்த ஆலோசனை அடிப்படையில் அனைத்து பரிகார சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பேரிலேயே ரத்த உறவு முறையிலான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மூலம் சில முக்கிய சடங்குகள் நடத்தப்பட்டன. இது நிச்சயம் ஜெயலலிதா ஆத்மாவை சாந்தப்படுத்தும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூறியுள்ளனர்.
கடைசி விருப்பம்
அதிமுக தொண்டர்கள் காலம், காலமாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் ஜெயலலிதாவின் விருப்பப்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல தருணங்களில் எம்ஜிஆர் தான், வாழ்விலும் அரசியலிலும் தனது முன்னோடியாக இருந்ததாக ஜெயலலிதா அறிவித்திருந்தார் அதனால் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் போல.
வைர அட்டிகை, ரிஸ்ட் வாட்ச்
ஜெயலலிதாவிற்கு விருப்பமான பச்சை பட்டுப்புடவை கட்டி, வைர வாட்ச் அணிவித்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு வைர அட்டிகை அணிவிக்கப்பட்டது அந்த நகையுடனேயே புதைத்துள்ளனர். 2001ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா விலை உயர்ந்த நகைகள் எதையும் அணியாமல் இருந்தார். அதற்கு காரணம் இனி நகைகளை அணிய மாட்டேன் என்று மக்களுக்கு அவர் அளித்த வாக்குதான். ஆனால் மரணத்திற்குப் பின்னர் வைர அட்டிகை வைர வாட்ச் உடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த எம்.ஜி.ஆர் வாட்ச் போல ஜெயலலிதாவின் கையில் உள்ள வாட்ச் சத்தமும் கேட்கும் என்பதில் சந்தேகம் இல்லை.