தாக்குதல் அச்சத்தில் சன் டிவி நிருபர்கள்: லோகோவை கழற்றிவிட்டு செய்தி தருகிறார்கள்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு கடந்த சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அப்போது செய்தியை ஒளிபரப்ப கலைஞர் மற்றும் சன்டிவிகள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை கொண்டுவருவதை தவிர்த்துவிட்டன.
தீர்ப்பு எப்படி வந்தாலும், தங்கள் வேன் மீது தாக்குதல் நடத்த அதிமுகவினர் தயாராக இருப்பார்கள் என்ற அச்சத்தால் அவர்கள் வேன்களை கொண்டுவரவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திமுக தரப்பில், இன்னும் அச்சம் விலகியபாடில்லை என்று தெரிகிறது. ஜெயலலிதா தொடர்பான எந்த ஒரு செய்தியை நிருபர்கள் அளிப்பதாக இருந்தாலும் மைக்கில் இருந்து சன் டிவி லோகோவை அகற்றிவிடுகின்றனர். பொதுவாக லோகோ வைத்த மைக்கை முந்தி காண்பிப்பதில்தான் டிவி சேனல் நிருபர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் திடீரென லோகோ கழற்றப்பட தாக்குதல் அச்சமே காரணமாக கூறப்படுகிறது.
லோகோவுடன் கூடிய மைக்குடன் நிருபர்கள் பேசினால், எந்த தொலைக்காட்சி நிருபர் என்பதை அதிமுகவினர் அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சம் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. திரைத்துறையினர் போராட்ட செய்தியாக இருக்கட்டும், அல்லது பெங்களூர் நிலவர செய்தியாகட்டும் லோகோ இல்லாமல்தான் சன் செய்திகள் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.