ஜெ.வை தாக்கி சுயநினைவு இல்லாமல் அப்பல்லோவில் சேர்த்தார் சசிகலா.. பொன்னையன் பகீர் பேச்சு
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தாக்கப்பட்டு சுயநினைவே இல்லாமல் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டதாக முன்னாள் அஅமைச்சர் பொன்னையன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதா தாக்கப்பட்டதாகவும் சுயநினைவே இல்லாமல்தான் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாவது:
ஜெ.வைப் பார்க்க அனுமதிக்கவில்லை
அப்பல்லோ மருத்துவமனையில் 73 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க எங்களைப் போன்ற முன்னணி நிர்வாகிகளை சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் யாரும் பார்க்க கூடாது என்றார்கள்.
ஓபிஎஸ்-க்கும் அனுமதி இல்லை
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கூட வார்டுக்குள் அனுதிக்க வில்லை. மைத்ரேயன் டாக்டராக இருந்தாலும் அவரையும் அனுமதிக்கவில்லை.
சசிக்கு ஏன் நோய் தொற்று வரவில்லை?
70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் இருந்த ஒரே நபர் சசிகலா மட்டும்தான். அவருக்கு ஏன் தொற்றுநோய் வரவில்லை?
பாதி உயிருடன்தான் கொண்டுவரப்பட்டுள்ளார்
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பு போயஸ்கார்டன் வீட்டில் அவரை தாக்கி உள்ளனர். இதில்தான் அவர் மயக்கம் அடைந்து சுயநினைவே இல்லாமல் அப்பல்லோ கொண்டு வரப்பட்டுள்ளார்.
சிகிச்சை விபரங்களை ஏன் மாற்ற வேண்டும்?
ஜெயலலிதாவை யாரையும் சந்திக்க விடாமல் தடுத்ததில் சசிகலாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. இல்லையென்றால், சிகிச்சை விவரங்களைக்கூட ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்?
ஏதோ உடன்படிக்கை
சசிகலாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஏதோ உடன்படிக்கை உள்ளது. அதனால் தான் முன்னுக்குபின் முரணான தகவல்களை வெளியிட்டனர்.
நிறைய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன
அப்பல்லோ மருத்துவமனையில் நிறைய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே ஜெயலலிதா சாவு மர்மம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு பொன்னையன் பேசினார்.