ஓராண்டு காலமாகவே ஜெயலலிதாவைத் துரத்தும் சுகவீனம் #Jayalalithaa
சென்னை: கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற நாள் முதலாகவே அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வந்தன. அதற்கேற்ப ஜெயலலிதாவின் உடல் நிலையும் கூட முன்பு போல அவருக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன.
அதேசமயம் அவரது உடல் நிலை குறித்து பல வதந்திகளும் கிளம்பி வந்தன. உடல்நலம் சரியில்லாவிட்டால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியே கூறும் அளவிற்கு பல தகவல்கள் ஜெயலலிதாவைப் பற்றி பரவின.
கடந்த ஆண்டு மும்பாயைத் தலைமையகமாகக்கொண்ட ரிடிப் இணையத்தளம் ஜெயலலிதா உடல்நலம்பற்றி வெளியிட்ட முதல் செய்தியில் டெல்லியில் ஜெயலலிதா உடல்நலம்பற்றி கடுமையான வதந்திகள் உலாவருகின்றன என்று கூறியது. இதே இணையத்தளம் வெளியிட்ட அதே கட்டுரையில் ஜெயலலிதாவுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுவதாகவும், ஆகவே உடனே அவர் சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. விமானம் தயாராகவிருக்கிறது என்று தகவலை வெளியிட்டது.
அதற்கு ஏற்றார் போல கடந்த ஆண்டு இப்தார் நோன்பு விழாவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்ப முடியாமல் போனதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதேபோல மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதற்கு உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
தெகல்கா இணையத்தளம், கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி டெலிகிராப்'ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியிட்டன. எனினும் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. 2016 மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. 6வது முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ஜெயலலிதா.
காணொலி காட்சிகள் மூலம் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தாலும், சமீபத்தில் கூட அண்ணா பிறந்தநாள் விழாவிற்காக அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த உடன் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக கொடநாடு செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பணியில் ஈடுபட்டார் ஜெயலலிதா.
இருப்பினும் அரசுத் தரப்பிலோ அல்லது முதல்வர் ஜெயலலிதா தரப்பிலோ அவரது உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான் இரவோடு இரவாக நேற்று முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளதால் தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சடைந்துள்ளனர்.