ஜெ.க்கு நோய் தொற்று குணமாகிவிட்டது.. அவர் விரும்பும்போது டிஸ்சார்ஜ்: அப்பல்லோ தலைவர் பேட்டி
ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல் நலம் தேறிவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும், ஜெயலலிதா டிஸ்சார்ஜ் எப்போது என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருந்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அப்பல்லோ தலைவர் பிரதாப் சி. ரெட்டியும், நிருபர்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது: ஜெயலலிதா நோய் தொற்றுக்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் மூலம், ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் தொற்று இப்போது முற்றிலுமாக குணமாகியுள்ளது. ஜெயலலிதா, மனதளவிலும், உடல் அளவிலும் திடமாக உள்ளார்.
முதல்வரின் விருப்பத்தின் பேரில்தான், அவர் வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். அவர் எப்போது வீடு திரும்பினால் நன்றாக இருக்கும் என உணர்கிறாரோ அப்போது வீட்டுக்கு அனுப்பப்படுவார். தற்போது நார்மல் உணவுகளை அவர் சாப்பிட்டு வருகிறார். இவ்வாறு பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.