கண்ணுபடப் போகுதம்மா… தலையில் பூசணிக்காய் வைத்து திருஷ்டி கழித்த தொண்டர்கள்
சென்னை: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையாகி சனிக்கிழமையன்று சென்னை வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை 16 கி.மீ. தூரத்துக்கு சாலையின் இருபுறமும் அதிமுகவினர் மனித சங்கிலி போல திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
ஜெயலலிதா சென்னை திரும்பிய சனிக்கிழமையன்ற சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் ஜெயலலிதா வந்து இறங்கிய உடன் வெடிக்கப்பட்ட பட்டாசு சத்தம் விண்ணை அதிரவைத்தது.
விமானத்தில் இருந்து இறங்கி தனது ரேஞ்ச் ரோவர் காரில் சசிகலா மற்றும் இளவரசியுடன் போயஸ் தோட்டத்துக்கு புறப்பட்டார் ஜெயலலிதா.
பூமழை தூவி
வான் மழை ஒருபுறம் வரவேற்க மேளதாளம் முழங்க பூமழை தூவி வரவேற்பு கொடுத்தனர் அதிமுகவினர்.
காத்திருந்த தொண்டர்கள்
ஜெயலலிதாவை வரவேற்க காலையில் இருந்தே மழையில் அதிமுகவினர் பல இடங்களில் திரண்டிருந்தனர். விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை ஆங்காங்கே கூடியிருந்தனர். சாலையோரங்களில் மனித சங்கிலிபோல கைகோர்த்து காத்திருந்தனர்.
உணவு பரிமாறிய தொண்டர்கள்
கொட்டும் மழையில் ஜெயலலிதாவை வரவேற்க காத்திருந்த தொண்டர்களுக்கு ஆங்காங்கே உணவு பரிமாறப்பட்டது. சிலர் அம்மாவை காணும் வரை சாப்பிட மாட்டோம் என்று விரதம் இருந்தனர். ஜெயலலிதாவின் கார் கடந்த உடன் தங்களின் விரத்ததை முடித்துக்கொண்டனர்.
வழி எங்கும் உற்சாகம்
மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை வழியே 6.05 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். வழியில், கோட்டூர்புரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் முன்பு ஒரு நிமிடம் காரை நிறுத்தச் சொல்லி, சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தார்.
தீபாவளி வந்துருச்சே
ஜெயலலிதாவின் வாகனம் தங்களை கடந்து சென்றபோது, கையெடுத்து கும்பிட்டும், இரட்டை விரலை காட்டியும் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பலர் கார் மீது மலர்களை தூவினர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராயல் சல்யூட்
ஜெயலலிதாவின் வருகையையொட்டி, விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழிநெடுக பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், ஜெயலலிதா கார் வந்தபோது அவருக்கு சல்யூட் அடித்தனர்.
புன்னகைத்த ஜெ
வழியில் நின்ற தொண்டர்கள் மற்றும் மக்களைப் பார்த்து புன்னகைத்தபடியே ஜெயலலிதா பயணித்தார்.
கறுப்பு வெள்ளை சிவப்பு
அதிமுகவின் கட்சிக் கொடியான கறுப்பு, வெள்ளை, சிவப்பு வர்ணங்களை உடலில் வரைந்து கொண்டு தங்களின் தலைவியை வரவேற்றனர் தொண்டர்கள்.
ஓடிய தொண்டர்கள்
கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் ஜெயலலிதாவின் கார் மெதுவாக சென்றது. அப்போது பலர் ஆர்வ மிகுதியால் ஜெயலலிதா காரை நோக்கி ஓடினர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.
கண்ணுபட போகுதம்மா...
போயஸ் தோட்டத்துக்குள் ஜெயலலிதா நுழைந்ததும் பெண்கள் பூசணிக்காய் சுற்றியும், ஆரத்தி எடுத்தும், தேங்காய் சுற்றி உடைத்தும் திருஷ்டி கழித்தனர்.
தலையில் பூசணி
அதிமுக தொண்டர் ஒருவர் தனது தலையில் பூசணிக்காயை சுமந்தவாறே காத்திருந்தார். ஜெயலலிதாவின் கார் போயஸ் தோட்டத்தை அடைந்த உடன் சூடம் கொளுத்தி திருஷ்டி கழித்தார்.
இரட்டை தீபாவளி
ஜெயலலிதா தனது வீட்டுக்குள் சென்ற பிறகு, தொண்டர்கள் ‘ஹேப்பி தீபாவளி' என்று கோஷமிட்டு, ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொண்டனர். எங்களுக்கு இந்த வருஷம் ரெண்டு தீபாவளி என்று மகிழ்ச்சி பொங்க கூறினர்.