"மக்கள் கட்சி"யை ஜெயிக்க வைத்த ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு நன்றி.. "மக்கள் முதல்வர்" அறிக்கை!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினை அமோக வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 28 வேட்பாளர்களையும் தோற்கடித்து, 151516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் வளர்மதி.
இதுகுறித்து அவரது அறிக்கையில், "அ.இ.அ.தி.மு.க மக்களின் கட்சி. மக்கள் தங்களுடைய வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நம்புகின்ற ஒரே கட்சி. மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றது அதிமுக. அதனைப் புரிந்து கொண்ட மக்களும் இவ்வெற்றியினை எமது கட்சியின் வேட்பாளருக்கு அளித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்த வாக்காளர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.