15வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கியது: பரஸ்பரம் வணங்கிக்கொண்ட ஜெ.-ஸ்டாலின்!
சென்னை: 15வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதாவும், திமுக சட்டசபை குழு தலைவர் ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
சமீபத்தில் முடிவடைந்த 15வது சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
உடல் நலக்குறைவால் மரணமடைந்த அதிமுகவின் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ சீனிவேலுக்கு அவை தொடங்கியதும், உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, சட்டசபைக்குள் முதல்வர் ஜெயலலிதாவும், திமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினும் பரஸ்பரம் புன்னகையோடு வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். இதை பத்திரிகையாளர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
ஜெயலலிதா அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். இருப்பினும் அவருக்கு 12வது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்ததற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, வேண்டுமென்றே ஸ்டாலினை அவமதிக்கவில்லை என்றும், ஸ்டாலினுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாகவும், ஜெயலலிதா நேற்று விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று, இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டது, ஆரோக்கிய சட்டசபை செயல்பாட்டுக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
சீனிவேலுக்கு அஞ்சலி செலுத்தியதும், உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை, பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆளும் கட்சியினரும், சட்டசபை உறுப்பினர்களாக, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்ததும் அவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படும். அன்றைய தினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுகள் நடைபெறும்.