5 முறை முதல்வர்.. 6வது முறையாக எம்.எல்.ஏ! போடி முதல் ஆர்.கே.நகர் வரை ஜெ. கடந்து வந்த அரசியல் பயணம்
சென்னை: 5வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா இன்று 6வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்க இருக்கிறார். போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதி முதல் ஆர்.கே.நகர் வரை 7முறை அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 1996ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா பர்கூரில் பெற்ற தோல்வி எப்படி அவரது அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறதோ அதேபோல ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றியும் அவரது அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திரைப்பட நடிகையாக இருந்த ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டார். 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா, ஜானகி தலைமையில் அதிமுகவினர் தனித்தனியாக பிரிந்தனர்.
போடியில் முதல் வெற்றி
1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி தனித்துப் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது. அந்த தேர்தலில் அவர் போடி நாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருணாநிதி முன்னிலையில் பதவியேற்பு
ஜெயலலிதா அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் முதல்முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தமிழக சட்டசபையில் முதன் பெண் எதிர்கட்சித்தலைவராகவும் பொறுப்பு வகித்தார் ஜெயலலிதா.
பர்கூர் – காங்கேயத்தில்
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மரணமடைந்த சூழ்நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று 1991 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாகவும் 2வது முறையாக எம்.எல்.ஏவாகவும் பதவியேற்றார் ஜெயலலிதா
தோல்வி - தள்ளுபடி
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார். 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 132 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் அவர் நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவே தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆண்டிபட்டி அரசி
ஆண்டிபட்டி 2002ம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா 3வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 4வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
5வது முறையாக ஸ்ரீரங்கத்தில்
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்று 5வது முறையாக தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றதை அடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார் ஜெயலலிதா.
ஆர்.கே.நகரில் 6வது முறை
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்யவே, காலியாக இருந்த இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 6 வதுமுறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்கிறார் ஜெயலலிதா.