உடல் நல பிரச்சினையா?.. ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு நாள் மட்டுமே ஜெ. தேர்தல் பிரசாரம்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஒரே நாள் மட்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலக்குறைவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காலியாக உள்ள சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம், 27ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதாவை, அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு, இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது. தேர்தல் பணிக் குழு உறுப்பினர்களின் பட்டியலும், அப்போது வெளியிடப்படும்.
அடுத்த மாதம், 5ம் தேதி, ஜெயலலிதா மனு தாக்கல் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 21ம் தேதி, ஒரு நாள் மட்டும் ஆர்.கே.நகரில், அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் தொகை குறைவுதான் என்பதும், அது ஏற்கனவே அதிமுகவின் கோட்டை என்பதும், ஜெயலலிதா ஒரே நாள் பிரசாரம் செய்ய காரணம் என்று கூறப்பட்டாலும், வேறு ஒரு காரணமும், இந்த முடிவுக்கு காரணமாம்.
ஜெயலலிதாவின் உடல்நிலை சோர்ந்து காணப்படுகிறது என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். ஹைகோர்ட் தீர்ப்பு வந்தபிறகு. முதல்வராக பதவியேற்பதில் காலதாமதம் ஆனதற்கும் இதுதான் காரணமாக கூறப்பட்டது. முதல்வர் பதவியேற்பு விழாவின்போதும், ஜெயலலிதாவின் வழக்கமான மிடுக்கு குறைந்து காணப்பட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் ஒரே நாள் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யவும், ஜெயலலிதாவின் உடல்நலப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.