அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் இன்று - விலகாத மர்மங்கள்!!
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் இன்று. கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு சென்ற சசிகலா, கடைசியில் சடலமாகவே மக்களுக்கு காட்ட
சென்னை: நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறுதியில் சடலமாகவே அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், அமைச்சரவை சகாக்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா சிகிச்சையில் தொடங்கி அவரது மரணம் வரைக்கும் ஒரே மர்மமாகவே உள்ளது. 364 நாட்கள் கடந்த பின்னரும் அந்த மர்மம் விலகியதாக தெரியவில்லை.
சரித்திர வெற்றி
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வராக அரியணை ஏறினார் ஜெயலலிதா. ஆனால் 6 மாதம் கூட அவர் முதல்வராக ஆட்சி செய்ய இயற்கை ஒத்துழைக்கவில்லை.
உயிரோடு உலாவிய கடைசி நாள்
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனையடுத்து தாலிக்கு 8 கிராம் தங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தனது கைப்பட தொடக்கி வைத்தார். அப்போதே அவரது நடையில் தடுமாற்றம் இருந்தது. ஆனால் பேச்சில் கம்பீரம் குறையவில்லை.
அப்பல்லோவில் அனுமதி
செப்டம்பர் 22ஆம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
யாருக்கும் அனுமதியில்லை
நாட்கள் கடந்தன ஆனாலும் ஜெயலலிதாவின் முகத்தை காட்ட மருத்துவர்கள் மறுத்து விட்டனர். ரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆளுநர் என யாருக்குமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதியில்லை
சிகிச்சை அளித்தும் பயனில்லை
ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்க்க லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸிலிருந்து சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபி நிபுணர்கள் வந்து சிகிச்சை அளித்தும் எந்த பயனும் இல்லாமல் போனது.
எக்மோ சிகிச்சை
கடந்த டிசம்பர் 4ம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட போது எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு சில லட்சங்கள் செலவானது. எக்மோ கருவி மூலம் 24 மணி நேரத்திற்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ‘கார்டியாக் அரெஸ்ட்' எனப்படும் இதயச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கவலைக்கிடமாக உள்ளார் என்றும் அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
ஜெயலலிதாவை ஜெயித்த எமன்
டிசம்பர் 5ஆம் ஜெயலலிதா மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியிடப்பட்டது. 6ஆம் தேதியன்று அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்ற சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
பகீர் குற்றச்சாட்டு
செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ஜெயலலிதா கீழே விழுந்ததாகவும் ஆனால், அவரை தாங்கிப் பிடிக்கக்கூட ஆள் இல்லாத நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் ஊடகத்தில் பேட்டியளித்தார் பிஎச் பாண்டியன்.
சசிகலா தரப்பு
எங்களிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் உள்ளன. ஆனால், அந்த பச்சை உடையில் ஜெயலலிதாவை எதிரிகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே கொலைப்பழி சுமத்தியும் மருத்துவமனை புகைப்படங்களை வெளியிடவில்லை என்று திவாகரன் மகன் ஜெயானந்த் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
தர்மயுத்தம்
ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் முடிந்த நிலையில், அணிகள் இணைப்புக்காகத் தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
விடை தெரியாத கேள்விகள்
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி போயஸ் கார்டனில் என்னதான் நடந்தது? அவரின் உதவியாளர்கள் எங்கே சென்றனர்? அவருக்கு அளிக்கப்பட்டிருந்த கருப்பு பூனை படை எங்கே போனது? உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட போது, போயஸ்கார்டனில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே?. ஜெயலலிதாவிற்காக போயஸ்கார்டனில் எப்போது நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது?. இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே இருக்கிறது.
பலனடைய நினைத்தது யார்?
ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் பலனடைய நினைத்தது யார்? அதற்கான பலனை அறுவடை செய்தார்களா? அல்லது வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்து வருகிறார்களா? என்பதற்கான பதிலை ஜெயலலிதா உடன் இருந்த அந்த குடும்பத்தினரால் மட்டுமே கூற முடியும்.