ஜெயலலிதா கவலைக்கிடம்தான்.. ஆனாலும், ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்ன அப்பல்லோ அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்னும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதை அப்பல்லோ அறிக்கை சுட்டி காட்டுகிறது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தாலும், ஆறுதலான ஒரு வார்த்தையையும் அந்த செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி, சென்னை கிரீம் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்றுவரை முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை முறை மற்றும் ஆரோக்கியம் குறித்து 12 பத்திரிகை குறிப்புகளை அப்பல்லோ வெளியிட்டிருந்தது. 12வது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்ற தகவல் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் வெளியான அப்பல்லோவின் 13வது அறிக்கையில், ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து, மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த வார்த்தை தமிழக மக்களுக்கும், குறிப்பாக அதிமுக தொண்டர்களும் அதிர்ச்சியளிக்க கூடியதுதான். அதேநேரம், அடுத்த வரியிலேயே ஆறுதல் அளிக்கும் ஒரு தகவலையும் அப்பல்லோ கூறியுள்ளது.
எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்கள் சப்போர்ட்டுடன் ஜெயலலிதா உள்ளார் என்று அந்த அறிக்கையின் அடுத்தவரி கூறுகிறது. மேலும், முதல்வருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை அப்பல்லோ மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த வரிகள் தெரிவிக்கின்றன.
எனவே ஜெயலலிதா உடல்நிலை, இன்னமும் சிகிச்சையை ஏற்றுக்கொண்டு உள்ளது என்பதையே இந்த வரிகள் சுட்டி காட்டுகின்றன. இது தமிழக மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை தரும் வார்த்தையாகும்.