புரட்டிப் போடும் பேய்மழை... அதிகாரிகளுடன் முதல்வர் ஜெ. ஆலோசனை... அமைச்சர்கள் குழு நியமனம்
சென்னை: சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் பேய்மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் மீட்பு பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள மீட்பு நிவாரண பணிகளுக்கான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சிலவாரங்களாக பெய்த கனமழையால் ஒட்டுமொத்த நகரமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. தற்போது இடைவிடாத பேய்மழை கொட்டி வருவதால் சென்னை நகரமும் புறநகர் பகுதிகளும் மூழ்கி உள்ளன.
வானிலை ஆய்வு மையமோ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மேலும் 4 நாட்களுக்கு "அதிக" கனமழை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே பெரும் மழை பெய்யும் என அறிவித்தபோதும் தமிழக அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த மழைக்கு தேங்கிய வெள்ளநீரும் அப்புறப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் புதிய வெள்ளத்தால் மழைநீரை எங்கே எப்படி வெளியேற்றுவது என தெரியாத நிலையில் தமிழக அரசின் செயல்பாடு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்படாமல் இருக்கிறது என்பது பொதுமக்கள் ஆதங்கம்.
இதனிடையே வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார்.