உயர் சிகிச்சைக்காக ஜெயலலிதா சிங்கப்பூர் போவதாக பரபரப்பு கிளப்பிய மீடியாக்கள்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுகவினர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக, தர்கா, சர்ச்சுகள் என வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட திட்டமிட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடங்கள் செய்தி வெளியிட்டன.
நியூஸ் 18 வெளியிட்டிருந்த டிவிட்டில், அதிகபட்ச சுகர் மற்றும் கிட்னி சிகிச்சைக்காக ஜெயலலிதா சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதேபோல ஜிடிவி ஆங்கில வெப்சைட்டும், ஜெயலலிதா சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம், அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் நாம் கேட்டபோது, அந்த செய்திகள் பொய்யானதாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
இந்நிலையில், நியூஸ் 18 தனது டிவிட்டை சற்று நேரத்தில் அகற்றிவிட்டது. இதுகுறித்து பாஜகவின், சுப்பிரமணியசுவாமி விடுத்துள்ள டிவீட்டில், எனது ஆலோசனை என்னவென்றால் உடனடியாக ஒரு விமானத்தை அமர்த்தி அவர் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். நாம் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் அவர் நலமுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சாமி.
இதுபோன்ற குழப்பங்கள் பற்றி, அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, கிட்னி, சுகர் பிரச்சினைக்காக, ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும், அது வதந்தி எனவும் கூறினார்.