அப்பல்லோவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்.. கட்டுக்கடங்காத கூட்டம்.. கண்ணீர் மல்க பிரார்த்தனை
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 74 வதுநாளாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை: செப்டம்பர் 21ம் தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் டிவியில் பார்த்தார்கள் அன்றே சோர்வாகத்தான் இருந்தார். அதே சோர்வோடு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகத்தோடு அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 22ஆம் தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 74 நாட்கள் ஆகிவிட்டது. செப்டம்பர் 22ம் தேதி நள்ளிரவு அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
•செப்டம்பர் 23 நள்ளிரவு 1 மணியளவில் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமை காய்ச்சல் குணமடைந்ததாகவும், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.
•காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்ட அறிக்கை மெல்ல மெல்ல மாறியது. நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை என்று கூறப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
•லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியானது. தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.
• அக்டோபர் 1ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோவிற்கு வந்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றார்.
•சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள நிபுணர்களும் தற்போது பிசியோ தெரபி சிகிச்சை அளித்தனர். அவ்வப்போது இயற்கையாக சுவாசிப்பதாக தகவல் வெளியானது.
•அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலபங்களும் வந்து நலம் விசாரித்து சென்றனர். முதல்வர் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
• ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் நலம் விசாரித்தார். முதல்வரின் வசமிருந்த பொறுப்புக்கள் அனைத்தும் ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
•தமிழக முதல்வர் ஜெயலலிதா 58 நாட்களாக ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். நவம்பர் 19ம் தேதி தனியறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும், 90 சதவிகிதம் இயற்கையாக சுவாசிப்பதாகவும் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார்.
•ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. நிற்க, நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
•ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 நாளான இன்று அவருக்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
•அதிமுக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.