மனோ பலம், மருத்துவ பலம் மூலம் ஜெயலலிதா மீண்டு வருவார் - வைரமுத்து
வாழ்நாள் முழுவதும் போராட்டங்களை சந்தித்தவர் ஜெயலலிதா, உடல் நலப் போராட்டத்தில் இருந்து மனோ பலத்தில் மீண்டு வருவார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தன்னுடைய மனோ பலம் மருத்துவ பலத்தினால் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வருவார் என்று பாடலாசிரியர் கவிப்பேரரசர் வைரமுத்து கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 37 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண உடல் நலம் பெற பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தும், மருத்துவமனை சென்று உடல்நலம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர். தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இயக்குநர் பாரதிராஜா, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை சென்றார். அங்கு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் உள்ள அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்த பாரதிராஜா, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இன்று கவிஞர் வைரமுத்து, நடிகை ஷீலா, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன் மற்றும் நடிகர், நடிகைகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, ஜெயலலிதா முதல்வர் என்ற முறையிலும், நான் சார்ந்த கலை துறையின் மூத்த கலைவாணி என்ற முறையிலும், அவரது உடல் நிலை பற்றி விசாரிக்க வந்தேன். அவர் நலமாக இருப்பதாக நண்பர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்வர் ஜெயலலிதா. தற்போது அவர் உடல் நலப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவர் மருத்துவ பலத்தாலும் மனோபலத்தாலும் மீண்டு வருவார். முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்றார் வைரமுத்து.