அரசியலில் ஜெ., கருணாநிதி இல்லை... பலருக்கும் துணிச்சல் வந்துள்ளது: பொன்னார் ஆவேசம்
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என்பதால் பலருக்கும் அரசியலில் ஈடுபடும் துணிச்சல் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என்பதால் பலருக்கும் அரசியலில் ஈடுபடும் துணிச்சல் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக மிகவேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளியை பூர்த்தி செய்து மாநிலத்தில் முதல்நிலை கட்சியாக உருவாகி வருகிறது. இதனால் தான் பாஜகவில் தினந்தோறும் ஏராளமானோர் இணைந்து வருகிறார்கள்.
இன்றுகூட பாமகவில் இருந்து பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் புதிய போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் பலர் இறங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவது, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அரசியல் ஆதாயமாக மாற்றுவதும்தான் இப்போது தமிழகத்தில் நடக்கிறது. இதுதான் அரசியல் என்றாகிப்போயுள்ளது.
ஜெ, கருணாநிதி அரசியலில் இல்லை
தகுதி நிறைந்த தலைவர்களான ஜெயலலிதா மறைவு, கருணாநிதி அரசியலில் ஈடுபடாமல் இருப்பதால் பலருக்கு துணிச்சல் வந்துவிட்டது. விவசாயிகளுக்காகவே மோடி இருக்கிறார்.
மாட்டிறைச்சி தடை இல்லை
சந்தைகளில் மாடு விற்க சில விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என யாரும் சொல்லவில்லை. கால்நடைகளை காக்கவும், விவசாயிகளின் நலனை பாதுக்காகவுமே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
தூர் வருவது காலம் தாழ்ந்தது
மேட்டூர் அணை தூர்வாரப்படுவது காலம் தாழ்ந்தது, இருப்பினும் பாராட்டத்தக்கது. மண்பாண்டம் செய்பவர்களுக்கு அந்த மண் கிடைக்க வேண்டும். மணல் வியாபாரிகள் இடைத்தரகர்களாக இருக்க அனுமதிக்க கூடாது.
நாளைய போராட்டம் தேவையற்றது
ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக வணிகர்கள் எப்போதெல்லாம் மத்திய அமைச்சர்களை சந்திக்க கால அவகாசம் கேட்டார்களோ அப்போதெல்லாம் ஏற்பாடு செய்தோம். நாளை நடக்கும் போராட்டம் தேவையற்றது. ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் உள்ள விஷயம்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.