ஜெயா டிவியில் பேசப்போகும் ஜெ., உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஜெயலலிதா டிவியில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமையன்று முதல்வரின் காய்ச்சல் குணமடைந்து விட்டதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. முதல்வரின் உடல் குணமடைந்தாலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துத்துவர்கள் ஞாயிறன்று தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சரியாகிவிட்டாலும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தொண்டர்கள் தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படக்கூடாது என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. அதோடு தான் நலமாக இருப்பதாகவும், தொண்டர்களை உள்ளாட்சித்தேர்தலில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தினந்தோறும் பார்த்துவருகிறார். இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படும் நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஸ்சார்ஜ் ஆனதும், தொலைகாட்சி வாயிலாக, அவர் தன் உடல்நிலைக் குறித்து மக்களிடம் பேச இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வெள்ளத்தின் போது வாட்ஸ்ஆப் வாயிலாக பேசிய ஜெயலலிதா, விரைவில் டிவி மூலம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் டிவி மூலம் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.