ஜெயலலிதா நலம்... ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றம் - செயற்கை சுவாசம் கருவி அகற்றம்
முதல்வர் ஜெயலலிதா உடல் நலமடைந்து வருவதை முன்னிட்டு அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு விட்டதாகவும், அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: நாற்பது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இயல்பாக சுவாசிக்கும் ஜெயலலிதா ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஜெயலலிதா சிகிச்சை
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்படவே செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.
தொண்டர்கள் பிரார்த்தனை
43வது நாளாக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் ஆலயங்கள், மசூதிகள், சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
|
வருகிறார் அம்மா
அதிமுகவின், தொலைத்தொடர்பு பிரிவு செயலாளர் ஹரி பிரபாகரன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும், அவர் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் கடந்த இரு தினங்களுக்கு முன்புஅவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் கூறியது போலவே ஜெயலலிதா தற்போது சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறப்பு வார்டுக்கு மாற்றம்
2வது தளத்தில் உள்ள ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் அதே தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும், அவர் இயல்பாக சுவாசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பல்லோ அறிக்க
அக்டோபர் 21ம் தேதி11வது அறிக்கையை வெளியிட்ட அப்பல்லோ, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. தொற்று நோய், சர்க்கரை நோய், இதயம், நுரையீரல், நீரிழிவு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் முதல்வர் நன்றாக பேசுவதாகவும் அந்த அறிக்கை கூறியது.
இடைத்தேர்தலுக்கு முன் டிஸ்சார்ஜ்
நுரையீரலில் அடைப்பு பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா தற்போது இயல்பான நிலைக்கு திரும்பி விட்டதாகவும், அவர் இயல்பாக சுவாசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இரண்டாவது தளத்திற்கு செல்ல சசிகலா, இளவரசி அவர்களின் குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை வெளியாகுமா?
ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டது குறித்து விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் என்றைக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவமனை நிர்வாகம்தான் அறிவிக்க வேண்டும். நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு முன்பாகவே ஜெயலலிதா வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.