வி.எஸ்.ராகவன் மரணம் ‘கலைத்துறைக்கு இழப்பு’... : ஜெயலலிதா இரங்கல்
சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவனின் மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேடை நாடகங்கள், சினிமா, சின்னத்திரை நாடகங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவற்றில் நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் (90). கணைய புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த வி.எஸ்.ராகவன், சிகிச்சைப் பலனின்றி சென்னை மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
அன்னாரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:-
நடிகர் வி.எஸ்.ராகவனின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவர் பத்திரிகைத் துறையில் உதவி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி பின்பு, படிப்படியாக நாடகம், திரைப்படத் துறைகளில் அடியெடுத்து வைத்தார். கடந்த 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை திரைப்படத்தின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, 58 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவர் ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் என்பது மட்டுமல்ல, வானொலி நாடகங்களிலும், சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்தவர் என்பது பெருமைக்குரியது.
அனைவரிடமும் அன்புடன் பழகும் குணம் கொண்ட வி.எஸ்.ராகவனின் இழப்பு திரைப்படத் துறைக்கும், கலைத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.