ஜெ.வுக்கு சிறப்பான சிகிச்சை.... அப்பல்லோ மருத்துவர்களை பாராட்டிய லண்டன் டாக்டர் ரிச்சர்ட்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாக லண்டனில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே பாராட்டியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. ஆனால் இதை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
இதனிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே நேற்று சென்னை வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவர்களிடம் உரையாடிய டாக்டர் ரிச்சர்ட், ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறீர்கள் என பாராட்டினார். மேலும் அவரது ஆலோசனைப்படி கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னமும் 2 நாட்கள் சென்னையில் முகாமிட்டு ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்ட் சிகிச்சை அளிக்க உள்ளார்.