சென்னையில் 2 வழித்தடங்களில் மோனோ ரயில்: கிராமங்களில் 500 அம்மா பூங்காக்கள்- ஜெ., அறிவிப்பு
சென்னை: சென்னையில், போரூர்-வடபழனி, வேளச்சேரி-வண்டலூர் இடையே மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று சட்டசபை கூடியது. போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சென்னை போரூர் - வடபழனி மற்றும் வேளச்சேரி - வண்டலூர் இடையே மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் 43.48 கி.மீ., தூரத்திற்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இந்த திட்டம் ரூ.3,267 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தற்போது, மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் மோனோ ரயில் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி போரூர் - வடபழனி, வேளச்சேரி - வண்டலூர் இடையே சென்னையில் 2 வழித்தடங்களில் 43.48 கி.மீ தூரத்தத்துக்கு செயல்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
110 விதியின் கீழ் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
- தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் ரூ.73.6 கோடி
- 900 கி.மீ., மண்சாலைகள் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.
- 1200 கி.மீ., சிறு பழுதடைந்த தார் சாலைகள் புனரமைக்கப்படும்.
- அதிக சேதமடைந்த 1400 கி.மீ., தார் சாலைகள் சீரமைக்கப்படும்.
- புதிய தார் சாலைகள் அமைக்கவும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் ரூ.800 கோடி ஒதுக்கீடு.
- ரூ.27 கோடியில் 10 புதிய ஊராட்சி ஒன்றிய கட்டடங்கள் கட்டப்படும்.
- ஊரக பகுதிகளில் ரூ.50 கோடியில் 500 கிணறுகள் அமைக்கப்படும்.
- 10 ஆயிரம் கி.மீ., சாலைகளின் இருபுறங்களில்ரூ.195 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம்மரக்கன்றுகள் நடப்படும்.
- ரூ.200 கோடியில் கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- ரூ.300 கோடியில் 1200 சிறுபாசனஏரிகள் புனரமைக்கப்படும்
- கிராமப்புறங்களி்ல ரூ.100 கோடி மதிப்பிட்டில் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கப்படும்
- ஊரக பகுதியில் ரூ.50 கோடியில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்
- கடலூரில் வெள்ள நீர் தேங்குவதை தடுக்க ரூ.39 கோடியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கழிவுநீரை சுத்திகரிக்க 62 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
- கிராம ஊராட்சி செயலர்களின் ஓய்வூதியம் ரூ.1000லிருந்த ரூ.1500 ஆக உயர்வு
- செயலர்கள் ஓய்வு பெறும் போது தரப்படும் நிதி ரூ.60 ஆயிரமாக உயர்வு
- விழுப்புரத்தில் ஆவின் பால் கவர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.82 கோடியில் அமைக்கப்படும்.
- சுய உதவி குழுக்களுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி கடன் வழங்க நடவடிக்கை
இவ்வாறு முதல்வர் கூறினார்.