பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது ஜெயலலிதா உடல்!
மறைந்த ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட உள்ள ராஜாஜி ஹால் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா (68) உடல் இன்று காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கிருந்து நேராக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 4.30 மணிக்கு வைக்கப்படுகிறது.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே ராஜாஜி ஹால் அமைந்துள்ள பகுதியில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் லட்சக்கணக்கான பொதுமக்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வருவதால் அதற்கான ஏற்பாடுகளும் மும்முராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
1987 ம் ஆண்டு, டிசம்பர் 24-ம் தேதி மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் உடலும் ராமாவரம் தோட்டத்திலிருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.