பெருவிரல் ரேகை பதிக்கும் அளவுக்கு தான் ஜெ.உடல்நிலை உள்ளதா?
சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவர்களுடன் பேசி வருவதாகவும் 11வது அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தை பயன்படுத்துவதற்காக அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட form B படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்த போது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த form B படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அவரின் பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் பெருவிரல் ரேகை வைக்கும் அளவிற்குத்தான் ஜெயலலிதாவின் உடல்நிலை உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.