ஜெயலலிதாவின் உடல் நிலை கவலை அளிக்கிறது.. திருமாவளவன், சீமான் உருக்கம்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வெளி வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தேசிய அளவிலும், தமிழக அளவிலும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது, ராஜ்நாத் சிங் சென்னைக்கு வருவது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முன்னேற்பாடுகள் செய்வது என நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா நலம் பெற்று வருவார் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது.
அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். குணம் பெற்றுவிட்டார் என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று மருத்துவமனை அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. கார்டியாக் அரஸ்ட் என்ற சொல்லின் பொருள் சற்று ஆழமானது. நுட்பமானது.
நடைபெற்று கொண்டிருக்கும் அரசியல் ஆலோசனைகள் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த எண்ணத்தை மெல்ல மெல்ல தகர்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்கள் இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ அறிக்கைகள் நமக்கு அந்த நம்பிக்கையை அளிக்க வில்லை. அவர் நலம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்போம்.. வாழ்த்துவோம் என்று திருமாவளவன் கூறினார்.
இதேபோன்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக தொண்டர்களின் வேதனையில் பங்கேற்கிறேன் என்றும், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.