எங்கள் உயிரைக் கொடுத்தாவது சட்டசபையில் ஜெ. படத்தைத் திறப்போம்.. அமைச்சர் தங்கமணி ஆவேசம் !
தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது உறுதி என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல்: எங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தைத் திறப்போம் என நாமக்கலில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு காலமானார். இதையடுத்து ஜெயலலிதாவை சிறப்பிக்கும் வகையில் சட்டசபையில் அவரது படத்தை திறக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
கடந்த 24ம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு வர அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்த விழாவை தனி விழாவாக பிரம்மாண்டமாக நடத்த முதல்வர் திட்டமிட்டள்ளார். ஆனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறக்க கூடாது என ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எங்கள் உயிரைக் கொடுத்தாவது திறப்போம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவ படத்தை திறக்க கூடாது என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அவரது கட்சிக்கு 1998-ல் அங்கீகாரம் கொடுத்தது எங்கள் கட்சித் தலைவி ஜெயலலிதாதான் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவியான ஜெயலலிதாவின் படத்தை, எங்கள் உயிரைக் கொடுத்தாவது திறப்போம் என்றார்.