பாமகவினர் விடிய விடிய கொலை மிரட்டல்... ஆபாச எஸ்.எம்.எஸ்.கள்... ராமதாஸ் மீது தீபா காட்டம்
பெண் என்றும் பாராமல் டாக்டர் ராமதாசின் அடியாட்கள் விடிய விடிய எனது கைப்பேசிக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் அடியாட்கள் விடிய விடிய தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதோடு செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவதாக
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மாவின் வாரிசான என்னை அடியாட்கள் மூலம் நான் அரசியல் களத்திலிருந்து ஓடவேண்டும் என்று மிரட்டி பார்க்கிறார். நான் எந்த சல சலப்புக்கும் அஞ்சமாட்டேன் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். பசுமை தாயகம் என்ற பெயரில் தனது மகனை வைத்து மரம் வளர்ப்போம் என்று ஒரு அமைப்பை தொடங்கி விட்டு, வட மாவட்டம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்த கூட்டம் தான் டாக்டர் ராமதாஸ் கட்சி.
ஊழல் பற்றி உலகம் அறிய பேசும் ராமதாஸ் தனது மகன் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது முறை கேடாக நடந்து கொண்ட ஊழல் வழக்கிற்கு நீதி மன்ற நெடிய படிக்கட்டுகளை ஏறி இறங்குவதை ஊடகங்கள் வாயிலாக நாடு பார்த்து கொண்டு இருப்பதை மறந்து பேசி வருவது வேடிக்கையானது. கூட்டணி என்ற பெயரில் சீட்டுக்களைப் பெற்று போயஸ் தோட்டத்திற்கும் கோபாலபுரத்திற்கும் நடையாய் நடந்து பிழைப்பு நடத்திய பா.ம.க கூட்டம் தனித்து நின்று அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வில்லை. ஜாதி கலவரத்தை தூண்டியதால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
டெபாசிட் இழந்த கதை
மகனை முதல்வர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுவதும் பா.ம.க. டெபாசிட் தொகை இழந்த கதையை ராமதாஸ் மறந்து பேசுகிறார் ? திராவிட கட்சியின் தயவால் எம்.பி. எம்.எல்.ஏக்களை பெற்ற பா.ம.க. தனித்து நின்று ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாததுக்கு காரணம் என்ன?
நிராகரிக்கப்பட்ட அமைப்பு
மக்களால் நிராகரிக்கப் பட்ட அமைப்பு தான் பாமக. இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறுவதும் இரட்டை இலை இருந்தால் நிரந்தரமாக எந்த ஜென்மத்திலும் பாமக வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவும் முடக்க வேண்டும் என்ற வேற்று கோசத்தை ராமதாஸ் எழுப்பி வருகிறார்.
அரசியலில் விரட்ட முயற்சி
தற்போது அம்மாவின் அரசியல் வாரிசாக பெரும் மக்கள் சக்தியுடன் வலம்வரும் என்னை அரசியல் களத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, என் அரசியல் வளர்ச்சி அபரிவிதமாக வளர்ந்து வருவதை பொறுக்க முடி யாமல் என் கைபேசிக்கு ராமதாசின் கூலிப்பட்டாளம் இழிவாக பேசியது வருத்தம் அளிக்கிறது. அனைத்தையும் பதிவு செய்திருக்கின்றேன். அதே போல் ராமதாசின் அடியாட்கள் பட்டாளம் எனக்கு எழுதி அனுப்பிய குறுஞ்செய்திகளையும் பதிவு செய்துள்ளேன்.
இது முறையா?
குடும்ப பெண்ணான என்னை தவறாக சித்தரித்து இரவு முழுவதும் எனக்கு அவர்களின் தொண்டர்களை விட்டு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி பேச வைப்பது தமிழர் பண்பாடு பற்றி வாய் கிழிய பேசும் பெரியவர் ராமதாசுக்கு முறையா? கேரள பெண்களுக்காக குரல் கொடுத்தவர் என்னை இழிவாக தன் தொண்டர்களை வைத்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் முறையாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தயார்.
புறக்கணியுங்கள்
தயவு செய்து தமிழக பெண்கள் இவர் போன்ற மிரட்டல் பாணி அரசியல் வாதிகளை இத்தருணத்தில் அடையாளம் கண்டு கொள்ளும்படி தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன். கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பெண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றால் இவரை அரசியலில் இருந்து புறக்கணியுங்கள்.
என்றும் தீபா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.